Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

December 26, 2013

சில பாரதியார் பாடல்கள்


பிழைத்த தென்னந்தோப்பு

வயலிடை யினிலே செழுநீர் மடுக் கரையினிலே
அய லெவரு மில்லை தனியே ஆறுதல் கொள்ள வந்தேன்.

காற்றடித் ததிலே மரங்கள் கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவே.

சிறிய திட்டையிலே உளதோர் தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை- அதனை வாயு பொடிக்க வில்லை

வீழ்ந்தன சிலவாம்-மரங்கள், மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே-அதனை, வாயு பொறுத்து விட்டான்

தனிமை கண்டதுண்டு;-அதில்-சாரமிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில், அது தேம்பாகு மதுர மன்றோ?

இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்ப வொளித் திரளாய்;
பரவி யெங்கணுமே-கதிர்கள்-பாடிக் களித்தனவே.

நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன்,
என்றும் கவிதையிலே-நிலையாம்-இன்பம் அறிந்து கொண்டேன்.

வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி!-இதையென்-வாக்கு மறவாதே!

மழை

திக்குகள் எட்டும் சிதறி ‍ தக்கத்
     தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட‌
பக்க மலைகள் உடைந்து ‍ வெள்ளம்
     பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட‌
தக்கத் ததிங்கிட தித்தோம் ‍ அண்டம்
     சாயுது சாயுது சாயுது ‍ பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று ‍ தக்கத்
     தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட‌

வெட்டி யடிக்குது மின்னல் ‍ கடல்
     வீரத் திரை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் ‍ கூ
     கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா ‍ என்று
     தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய ‍ மழை
     எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!

அண்டம் குலுங்குது தம்பி!  தலை
     ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்  திசை
     வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;  என்ன‌
     தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்  இந்தக்
     காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்.

No comments:

Post a Comment