Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

February 09, 2015

மனப்பாடம் - கடிதம்

எழுத்தாளர் ஜெயமோகன் வலையத்தில் எனது கடிதம். ஒரு எழுத்தாளருடன் உரையாடலில் இருப்பது மனதிற்கு எவ்வளவு நன்றாக உணரச்செய்கிறது. :)
உனது எழுத்து நன்றாய் உள்ளது (சில ஒற்றெழுத்துப் பிழைகள் இருப்பினும்) என்று நண்பன் செவியர் சொல்லியது எனக்கு நன்றாய் உள்ளது. அதற்கு நான் ஜெயமோகனுக்குத் தான் கடமைப்பட்டு இருக்கிறேன். அவரது இணையத்தளத்தை தொடர்ந்து வாசிப்பதன் விளைவு.

வலையத்தில் வந்ததை பெருமையாக எண்ணவில்லை ஆனால் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

ஜெயமோகனின் -> மனப்பாடம் பதிவு (சுட்டியைத் தட்டவும்)
எனது கடிதம் -> மனப்பாடம் - கடிதம்  (சுட்டியைத் தட்டவும்) (கீழூம் உள்ளது)

அன்புள்ள ஜெ

தங்களின் மனப்பாடம் பற்றிய பதிவை பார்த்தேன். எனக்கு மனனம் செய்வதில் சிறு தயக்கம் இருந்தது. அது இப்பொழுது நீங்கியது. சென்ற ஆண்டு நானும் எனது நண்பரும் நாளும் ஒரு திருக்குறள் கற்க வேண்டும் என்று முடிவு செய்து, அக்குறளை பற்றிச் சற்று ஆராய்ந்து, அதற்கு ஒரு உதாரணம் கண்டுக்கொண்டு எங்களது வலைப்பூவில் பதிவு செய்துவந்தோம் (மேற்ப்படிப்பின் காரணமாக இடைவேளை ஆனால் வெண்முரசுவிற்கு அல்ல).

துவக்க காலத்தில் நான் எல்லா குறள்களையும் மனனம் செய்து வந்தேன். அது எனக்கு நன்கு நினைவில் உள்ளது. உதாரணமாக நான் துவக்கக் காலத்தில் மனனம் செய்த குறள் – “உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து”. ஒரு யானைப் பார்க்கும் பொழுது குறிப்பாக கோயில்களில் பாகனுடன் பார்க்கும் பொழுது அது இன்னும் ஆழமாய் நன்கு செல்கிறது. பின்பு எப்பொழுது கேட்டாலும் அக்குறளை அசைப் பிரித்து பொருள் சொல்ல முடிந்தது.

ஆனால், ஏன் மனனம் செய்ய வேண்டும்? என்னை மேம்படுத்திக்கொள்ளத் தானே பிறருக்கு சொல்வதற்கு/காட்டிக்கொள்வதற்கு இல்லையே என்று தோன்றத் துவங்கியப் பின்னர் மனனம் செய்வதைப் பெரும்பான்மையாக தவிர்த்து விட்டேன். அதனுடைய விளைவை நான் சில மாதங்கள் பின்பு தான் உணர்ந்தேன். குறள்களின் பொருள் (common sense-ஆக )நினைவில் இருந்தாலும் குறள் ஒரு படிமமாக நினைவில் இல்லாமல் ஒரு திறப்பாக இல்லாமல் இருந்தது. அது எவ்வளவுப் பெரிய தவறு. தியானத்திற்கு மனனம்-னும் எவ்வளவு முக்கியம் என்பதை உங்களது பதிவை கண்டப்பொழுது உணர்ந்தேன்.

நன்றி.

அன்புடன்
ராஜேஷ்

February 01, 2015

உயிர் என்றால் என்ன ?

ஜெயமோகனின் வெண்முரசுவில் (மகாபாரதம்) [நூல் மூன்று – வண்ணக்கடல் – 48] (சுட்டியை தட்டவும்) இருந்து 

“அழியாதது, என்றுமிருப்பது என்று இவற்றை அறிபவன் முதலில் உணர்வது தன்னுடைய அழிவையே. அருகமரபு அதையே முதல்ஞானமாக முன்வைக்கிறது. இத்தனை சொற்களுக்கு அப்பாலும் நீங்கள் அறிந்துகொள்ளாதது அது வைசேடிகரே. புடவியின் அகாலஇருப்பை தன் காலத்தைக்கொண்டே மானுட அகம் உணர்ந்துகொள்ளமுடியும்” என்றார்.

அப்பால் நீண்டகுழலை தோளில் அவிழ்த்துப்போட்டு கரியதாடியுடன் இருந்தவர்தான் வைசேடிகர் என்று இளநாகன் எண்ணிக்கொண்டான். “எது அழியக்கூடியது சாரங்கரே? எதுவும் அழிவதில்லை, அனைத்தும் உருமாறுகின்றன என்று உணர்வதே வைசேடிக மெய்யியலின் முதல்படி. இவ்வுடலை எரித்தால் சாம்பலாகும். காற்றில் பறக்கும். நீரில் கரையும். மண்ணில் கலக்கும். வேர்களில் உரமாகும். காயாகக் காய்த்து கனியாகக் கனிந்து உணவாக ஊறி இன்னொரு உடலாகும். எங்கு செல்கிறது அது? இங்குள அனைத்திலிருந்தும் அது எழுகிறது. இங்குள அனைத்திலும் மீண்டு செல்கிறது. பருப்பொருளுக்கு அழிவில்லை.”

“ஆனால் உயிர்?” என்று இருளுக்குள் எவரோ கேட்டனர். “உயிரென்பது ஒரு அறிதலே. வெற்றிலையும் சுண்ணமும் பாக்கும் கலந்து செந்நிறம் பிறப்பதுபோல இப்பருப்பொருட்களின் கூட்டால் உயிர் பிறக்கிறது. வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்து அது வெயிலில் காய்ந்தால் அச்செந்நிறம் எங்கே செல்கிறது? அது பிறிதொன்றாக மாறிவிடுகிறது. உயிரென்பது உடலின் ஒரு நிலை. இன்னொரு உடலின் அறிதல். உயிர் என்றால் என்ன என்று நான் கேட்டேனென்றால் நீங்கள் சொல்லும் அனைத்து விடைகளும் உயிரை இன்னொரு உயிரான நாம் அறியும் முறைகளைப்பற்றியதாகவே இருக்கும்.”

“முன்பொருநாள் கடலோடி ஒருவன் ஆழ்கடலில் கலம் உடைந்து நீந்தி மணிபல்லவம் என்னும் தீவுக்குச் சென்றான். அந்த மாயத்தீவுக்குச் செல்லும் முதல்மானுடன் அவன். அங்கே அவன் தாவரங்களுக்காக, பூச்சிகளுக்காக, பறவைகளுக்காக, மிருகங்களுக்காகத் தேடினான். பாறைகள் மட்டுமே இருந்த அந்தத் தீவில் உயிர்கள் இல்லை என்று எண்ணி ஏங்கி அவன் மடிந்தான். அவனை அழைத்துச்செல்ல வந்த தேவர்களிடம் ‘உயிர்களில்லா வெளிக்கு என்னை கொண்டுவருமளவுக்கு நான் செய்த வினை என்ன?’ என்றான். ‘இங்கே உயிர்களில்லை என நீ எப்படி எண்ணினாய்? இங்குள்ள பாறைகள் அனைத்தும் நீ அறியாத இயல்புகொண்ட உயிர்களே. உயிர் என நீ கொண்ட அறிதலின் எல்லையால் நீ இறந்தாய். வினை என்பது அறியாமையே’ என்றனர் தேவர். ஆம் வணிகர்களே, உயிரென்பது பருப்பொருளில் நாமறியும் ஒரு நிலை மட்டுமே.”

“அவ்வண்ணமே நாமறியும் இப்பருப்பொருள்வெளி என்பதும் ஓர் அறிதல்மட்டுமே என உணரும்போதே அறிதலின் பயணம் தொடங்குகிறது. இங்குள்ள ஒவ்வொன்றும் சொற்கள். அச்சொற்களால் சுட்டப்படுவதாக நிற்பதே பரு. அதையே பதார்த்தம் என்கின்றது வைசேடிக மெய்யியல். தென்மொழியாகிய தமிழிலேயே அதற்கு மிகச்சரியான சொல்லாட்சி உள்ளது. பொருள் என்னும் சொல்லுக்கு அவர்கள் அர்த்தம் என்றும் வஸ்து என்றும் பொருள்கொள்கிறார்கள்” வைசேடிகர் சொன்னார்.  “பருப்பொருள் வெளி கோடானுகோடி பதார்த்தங்களால் ஆனது.”

“அம்முடிவின்மையை ஒன்றொன்றாய்த் தொட்டு அறிய முடிவில்லா காலமும் அகமும் தேவை. ஆகவே அவற்றை நாம் அறிவதில் உள்ள நெறிகளை மட்டுமே வகுத்துக்கொள்கிறது வைசேடிகமெய்யியல். பொருண்மை, குணம், செயல், பொதுத்தன்மை, தனித்தன்மை, இணைவுத்தன்மை என்னும் ஆறு வெளிப்பாடுகளால் இப்பருவெளி நம்மை வந்தடைகிறது. இங்குள்ள ஒவ்வொரு பொருளும் இவ்வெளிப்பாடுகளில் காட்டும் சிறப்புத்தன்மையாலேயே தன்னை தனித்துக்காட்டுகிறது. ஆகவேதான் எங்கள் மெய்யியலை வைசேடிகம் என்கிறோம்.”

“பருப்பொருள் முதலியற்கையால் ஆனது என்று சொல்லும் சாங்கியர்களும் உங்களவர்களா?” என்று ஒரு குரல் கேட்டது. “இல்லை. அவர்கள் முதற்பொருளை உணர்ந்தவர்கள். ஆனால் தெளிந்தவர்கள் அல்ல. மூவாமுதலா பேருலகின் பொருண்மையை அவற்றில் எது அறியற்பாலதோ அதைக்கொண்டல்லவா அறியவேண்டும்? கரும்பாறையை உடைத்தால் தூளாகிறது. நீரை உடைத்தால்?” வைசேடிகர் சொன்னார். “நீர் நம் கண்ணுக்குத்தெரியாத அணுக்களாக ஆகிறது. அவ்வணுக்களின் படர்தலைத்தான் நாம் ஈரம் என்கிறோம்.”

“ஒன்றின் மிகச்சிறிய அலகே அணு. அதற்குமேல் பகுக்கமுடியாதது எதுவோ அதுவே அணு. இங்குள்ள ஒவ்வொரு பருப்பொருளும் அதன் நுண்ணணுக்களால் ஆனது. நீர் நீரின் அணுக்களால். நெருப்பு நெருப்பின் அணுக்களால். அவற்றின் தனித்தன்மைகள் அனைத்தும் அந்த அணுக்களின் இயல்புகளாக உள்ளவைதான். அணுக்கள் ஆறு நெறிகளால் ஆடும் ஆடலே இப்புடவி.”

இருளுக்குள் எவரோ அசைந்து அமர்ந்தனர். அவருக்குள் ஓடும் வினா அந்த அசைவில் தெரிந்தது. பலர் குறட்டைவிட்டுக்கொண்டிருந்தனர். “வணிகர்களே, அணு அண்டமாவதெப்படி என உங்கள் அகம் திகைக்கிறது. பாருங்கள், இதோ இந்தக் கூடத்தில் விளக்கொளியில் புகைபோலப் பறக்கும் நுண்ணிதின் நுண்ணிய நீர்த்துமிகளே அதோ வெளியே விண்ணையும் மண்ணையும் மூடிப்பொழிந்துகொண்டிருக்கின்றன. அதற்கப்பால் முடிவிலாது கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன” என்றார் வைசேடிகர். இருளில் அக்கணத்தில் அனைத்தையும் முழுமையாகக் கண்டுவிட்டதுபோல இளநாகன் உடல் சிலிர்த்துக்கொண்டது.