Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

March 05, 2016

வையத் தலைமை கொள் - பாரதி

Image result for வையத் தலைமை கொள்

ஆத்திச்சூடியில் ஒரு சொல் இருக்கிறது. “வையத் தலைமை கொள்”. பாரதி ஒவ்வொருவரையும் பார்த்துச் சொல்கிறான் வையத் தலைமை கொள். இதில் ஒரு முரண்பாடு உண்டு.

வையகம் ஒன்றுதான். அதற்கு நான் தலைமை ஏற்றுக்கொண்டால் அந்த சொல் உங்களுக்கு இல்லையா? அப்படி சொன்னால் இந்த வையத் தலைமை கொள் என்கிற சொல்லுக்கு என்ன பொருள். சில இலக்கியச் சொற்களுக்கு பொருள் அற்புதமாக இருக்கிறது. ஆனால் பொழிப்புரை தந்தவர்கள் தவறாக தந்து விடுகிறார்கள். ஒரு வார்த்தைக்கான பொருள் எப்போது நமக்கு புரிந்துபோகிறதோ வாழ்க்கைக்கான அர்த்தம் அப்போது புரிந்து போகிறது.

“வையத் தலைமை கொள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். இன்று போலியாக நடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த உலகம் கோடி ரூபாய் கொட்டிக் கொடுக்கிறது. ஆனால் அதுவே ஒரு உண்மையான சிந்தனையாளனுக்குத் தரமாட்டார்கள். அப்படியென்றால் சிந்தனையாளர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக மாற மாட்டார்களா? சுகி சிவம் சொல்வார், “நான் கோடீஸ்வரன்தான், எப்போது தெரியுமா”? நான் சுகி சிவம் பேசுகிறேன் என்று சொன்னால் தமிழகத்தில் ஒரு கோடி காதுகள் எப்போது திறந்துகொள்கின்றனவோ அப்போது நான் கோடீஸ்வரன் ஆகிறேன்.” இப்போது எனக்கு “வையத் தலைமை கொள்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிகின்றது. நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் நீங்கள் அந்தத் துறையில் வல்லமை பெற்றீர்களென்றால் “வையத் தலைமை” கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். எந்தத் துறையை கையில் எடுத்தாலும் அந்தத் துறையில் முழுமையாக ஈடுபாடு கொண்டு அந்த உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்பு. அதுதான் வல்லமை. அது ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது. நான் இன்றைக்கு ஒரு வார்த்தையை விதைக்கிறேன். நண்பர்களே! அந்த வார்த்தையை உங்கள் மன அறையில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு மந்திரமாக சொல்லிக் கொடுங்கள். “வியப்பது வீழ்ச்சி” யாரைப் பார்த்தும் நீங்கள் வியக்காதீர்கள்.


நன்றி: நமது நம்பிக்கை

March 03, 2016

ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.


பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.


சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.


தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.

- மகாகவி சுப்ரமணிய பாரதி

Image result for ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)