Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label Mahabharatham_Stories. Show all posts
Showing posts with label Mahabharatham_Stories. Show all posts

March 11, 2015

தனுர்வேதம்


அக்னிவேசர் அவனை கைத்தலம் பற்றி அழைத்துவந்ததைக்கண்ட ஷத்ரிய இளைஞர்கள் திகைத்தனர். அன்றைய தனுர்வேத வகுப்பில் அவனை அவர் முன் நிரையில் அமரச்செய்தபோது ஷத்ரியர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். அக்னிவேசர் கேட்டார் “வில் என்பது என்ன?” வில் என்பது வானத்தின் வளைவு என்றான் ஒருவன். மலைச்சிகரங்களின் வடிவம் என்றான் இன்னொருவன். நாகம் என்றான் பிறிதொருவன். அறம் என்றும் வீரம் என்றும் வெற்றி என்றும் சொன்னார்கள் பலர். அக்னிவேசர் துரோணனிடம் கேட்டார் “பரத்வாஜரின் மைந்தனே, நீ சொல்.”

துரோணன் எழுந்து “வில் என்பது ஒரு மூங்கில்” என்றான். மாணவர்கள் நகைக்கும் ஒலிக்கு நடுவே தொடர்ந்து “மூங்கில் என்பது ஒரு புல்” என்றான். அக்னிவேசர் புன்னகையுடன் “அம்புகள்?” என்றார். “அம்புகள் நாணல்கள். நாணலும் புல்லே” என்றான் துரோணன். “அப்படியென்றால் தனுர்வேதம் என்பது என்ன?” என்றார் அக்னிவேசர். “வில்வித்தை என்பது புல்லும் புல்லும் கொண்டுள்ள உறவை மானுடன் அறிந்துகொள்வது.” அக்னிவேசர் தலையசைத்தார். “புல்லை ஏன் அறியவேண்டும் மானுடர்?” என்றார். துரோணன் “ஏனென்றால் இந்த பூமியென்பது புல்லால் ஆனது” என்றான் .

அக்னிவேசர் திரும்பி தன் மூத்தமாணவனாகிய மாளவ இளவரசன் மித்ரத்வஜனிடம் “இவனை என்ன செய்யலாம்?” என்றார். “பிரம்மனில் இருந்து தோன்றியதும் ஐந்தாவது வேதமுமான தனுர்வேதத்தைப் பழித்தவனை அம்புகளால் கொல்லவேண்டும்” என்று அவன் சொன்னான். “அவ்வண்ணமே செய்” என்றபின் துரோணனிடம் “உன் புல் உன்னை காக்கட்டும்” என்றார் அக்னிவேசர். மாளவன் தன் வில்லை எடுத்து அம்பைத் தொடுப்பதற்குள் துரோணன் தன் முதுகுக்குப்பின் கச்சையில் இருந்த தர்ப்பைக்கட்டில் இருந்து இரு கூரிய தர்ப்பைகளை ஒரே சமயம் எடுத்து வீசினான். மாளவனின் கண்ணுக்கு கீழே கன்னச்சதைகளில் அவை குத்தி நிற்க அவன் அலறியபடி வில்லை விட்டுவிட்டு முகத்தைப்பொத்திக்கொண்டான். அவன் விரலிடுக்கு வழியாக குருதி வழிந்தது.

அனைவரும் திகைத்த விழிகளுடன் பார்த்து நிற்க அக்னிவேசர் புன்னகையுடன் சொன்னார் “இதையும் கற்றுக்கொள்ளுங்கள் ஷத்ரியர்களே. கணநேரத்தில் மாளவனின் கண்களை குத்தும் ஆற்றலும் அவ்வாறு செய்யலாகாது என்னும் கருணையும் இணைந்தது அந்த வித்தை. கருணையே வித்தையை முழுமைசெய்கிறது.” மாளவனை நோக்கித் திரும்பி “உன் இரண்டாம் ஆசிரியனின் காலடிகளைத் தொட்டு வணங்கி உன்னை அர்ப்பணம் செய்துகொள். அவன் அருளால் உனக்கு தனுர்வேதம் கைவரட்டும்” என்றார் அக்னிவேசர்.

February 01, 2015

உயிர் என்றால் என்ன ?

ஜெயமோகனின் வெண்முரசுவில் (மகாபாரதம்) [நூல் மூன்று – வண்ணக்கடல் – 48] (சுட்டியை தட்டவும்) இருந்து 

“அழியாதது, என்றுமிருப்பது என்று இவற்றை அறிபவன் முதலில் உணர்வது தன்னுடைய அழிவையே. அருகமரபு அதையே முதல்ஞானமாக முன்வைக்கிறது. இத்தனை சொற்களுக்கு அப்பாலும் நீங்கள் அறிந்துகொள்ளாதது அது வைசேடிகரே. புடவியின் அகாலஇருப்பை தன் காலத்தைக்கொண்டே மானுட அகம் உணர்ந்துகொள்ளமுடியும்” என்றார்.

அப்பால் நீண்டகுழலை தோளில் அவிழ்த்துப்போட்டு கரியதாடியுடன் இருந்தவர்தான் வைசேடிகர் என்று இளநாகன் எண்ணிக்கொண்டான். “எது அழியக்கூடியது சாரங்கரே? எதுவும் அழிவதில்லை, அனைத்தும் உருமாறுகின்றன என்று உணர்வதே வைசேடிக மெய்யியலின் முதல்படி. இவ்வுடலை எரித்தால் சாம்பலாகும். காற்றில் பறக்கும். நீரில் கரையும். மண்ணில் கலக்கும். வேர்களில் உரமாகும். காயாகக் காய்த்து கனியாகக் கனிந்து உணவாக ஊறி இன்னொரு உடலாகும். எங்கு செல்கிறது அது? இங்குள அனைத்திலிருந்தும் அது எழுகிறது. இங்குள அனைத்திலும் மீண்டு செல்கிறது. பருப்பொருளுக்கு அழிவில்லை.”

“ஆனால் உயிர்?” என்று இருளுக்குள் எவரோ கேட்டனர். “உயிரென்பது ஒரு அறிதலே. வெற்றிலையும் சுண்ணமும் பாக்கும் கலந்து செந்நிறம் பிறப்பதுபோல இப்பருப்பொருட்களின் கூட்டால் உயிர் பிறக்கிறது. வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்து அது வெயிலில் காய்ந்தால் அச்செந்நிறம் எங்கே செல்கிறது? அது பிறிதொன்றாக மாறிவிடுகிறது. உயிரென்பது உடலின் ஒரு நிலை. இன்னொரு உடலின் அறிதல். உயிர் என்றால் என்ன என்று நான் கேட்டேனென்றால் நீங்கள் சொல்லும் அனைத்து விடைகளும் உயிரை இன்னொரு உயிரான நாம் அறியும் முறைகளைப்பற்றியதாகவே இருக்கும்.”

“முன்பொருநாள் கடலோடி ஒருவன் ஆழ்கடலில் கலம் உடைந்து நீந்தி மணிபல்லவம் என்னும் தீவுக்குச் சென்றான். அந்த மாயத்தீவுக்குச் செல்லும் முதல்மானுடன் அவன். அங்கே அவன் தாவரங்களுக்காக, பூச்சிகளுக்காக, பறவைகளுக்காக, மிருகங்களுக்காகத் தேடினான். பாறைகள் மட்டுமே இருந்த அந்தத் தீவில் உயிர்கள் இல்லை என்று எண்ணி ஏங்கி அவன் மடிந்தான். அவனை அழைத்துச்செல்ல வந்த தேவர்களிடம் ‘உயிர்களில்லா வெளிக்கு என்னை கொண்டுவருமளவுக்கு நான் செய்த வினை என்ன?’ என்றான். ‘இங்கே உயிர்களில்லை என நீ எப்படி எண்ணினாய்? இங்குள்ள பாறைகள் அனைத்தும் நீ அறியாத இயல்புகொண்ட உயிர்களே. உயிர் என நீ கொண்ட அறிதலின் எல்லையால் நீ இறந்தாய். வினை என்பது அறியாமையே’ என்றனர் தேவர். ஆம் வணிகர்களே, உயிரென்பது பருப்பொருளில் நாமறியும் ஒரு நிலை மட்டுமே.”

“அவ்வண்ணமே நாமறியும் இப்பருப்பொருள்வெளி என்பதும் ஓர் அறிதல்மட்டுமே என உணரும்போதே அறிதலின் பயணம் தொடங்குகிறது. இங்குள்ள ஒவ்வொன்றும் சொற்கள். அச்சொற்களால் சுட்டப்படுவதாக நிற்பதே பரு. அதையே பதார்த்தம் என்கின்றது வைசேடிக மெய்யியல். தென்மொழியாகிய தமிழிலேயே அதற்கு மிகச்சரியான சொல்லாட்சி உள்ளது. பொருள் என்னும் சொல்லுக்கு அவர்கள் அர்த்தம் என்றும் வஸ்து என்றும் பொருள்கொள்கிறார்கள்” வைசேடிகர் சொன்னார்.  “பருப்பொருள் வெளி கோடானுகோடி பதார்த்தங்களால் ஆனது.”

“அம்முடிவின்மையை ஒன்றொன்றாய்த் தொட்டு அறிய முடிவில்லா காலமும் அகமும் தேவை. ஆகவே அவற்றை நாம் அறிவதில் உள்ள நெறிகளை மட்டுமே வகுத்துக்கொள்கிறது வைசேடிகமெய்யியல். பொருண்மை, குணம், செயல், பொதுத்தன்மை, தனித்தன்மை, இணைவுத்தன்மை என்னும் ஆறு வெளிப்பாடுகளால் இப்பருவெளி நம்மை வந்தடைகிறது. இங்குள்ள ஒவ்வொரு பொருளும் இவ்வெளிப்பாடுகளில் காட்டும் சிறப்புத்தன்மையாலேயே தன்னை தனித்துக்காட்டுகிறது. ஆகவேதான் எங்கள் மெய்யியலை வைசேடிகம் என்கிறோம்.”

“பருப்பொருள் முதலியற்கையால் ஆனது என்று சொல்லும் சாங்கியர்களும் உங்களவர்களா?” என்று ஒரு குரல் கேட்டது. “இல்லை. அவர்கள் முதற்பொருளை உணர்ந்தவர்கள். ஆனால் தெளிந்தவர்கள் அல்ல. மூவாமுதலா பேருலகின் பொருண்மையை அவற்றில் எது அறியற்பாலதோ அதைக்கொண்டல்லவா அறியவேண்டும்? கரும்பாறையை உடைத்தால் தூளாகிறது. நீரை உடைத்தால்?” வைசேடிகர் சொன்னார். “நீர் நம் கண்ணுக்குத்தெரியாத அணுக்களாக ஆகிறது. அவ்வணுக்களின் படர்தலைத்தான் நாம் ஈரம் என்கிறோம்.”

“ஒன்றின் மிகச்சிறிய அலகே அணு. அதற்குமேல் பகுக்கமுடியாதது எதுவோ அதுவே அணு. இங்குள்ள ஒவ்வொரு பருப்பொருளும் அதன் நுண்ணணுக்களால் ஆனது. நீர் நீரின் அணுக்களால். நெருப்பு நெருப்பின் அணுக்களால். அவற்றின் தனித்தன்மைகள் அனைத்தும் அந்த அணுக்களின் இயல்புகளாக உள்ளவைதான். அணுக்கள் ஆறு நெறிகளால் ஆடும் ஆடலே இப்புடவி.”

இருளுக்குள் எவரோ அசைந்து அமர்ந்தனர். அவருக்குள் ஓடும் வினா அந்த அசைவில் தெரிந்தது. பலர் குறட்டைவிட்டுக்கொண்டிருந்தனர். “வணிகர்களே, அணு அண்டமாவதெப்படி என உங்கள் அகம் திகைக்கிறது. பாருங்கள், இதோ இந்தக் கூடத்தில் விளக்கொளியில் புகைபோலப் பறக்கும் நுண்ணிதின் நுண்ணிய நீர்த்துமிகளே அதோ வெளியே விண்ணையும் மண்ணையும் மூடிப்பொழிந்துகொண்டிருக்கின்றன. அதற்கப்பால் முடிவிலாது கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன” என்றார் வைசேடிகர். இருளில் அக்கணத்தில் அனைத்தையும் முழுமையாகக் கண்டுவிட்டதுபோல இளநாகன் உடல் சிலிர்த்துக்கொண்டது.

January 25, 2015

அன்னமே பிரம்மம்

பல நாட்களுக்குப்(மாதங்களுக்குப்) பிறகு ஒரு பதிவு இங்கே. கடந்த இரு வாரங்களாக என் மனதில் ஓடும் ஒரு வாக்கியம் ‘அன்னமே பிரம்மம் என்கின்றன உபநிடதங்கள்’. அதன் பிறகு எனக்கு சமையல் செய்வது இன்னும் இன்பமாய் உள்ளது. இன்புர செய்கிறேன்.

கீழ்காணும் ஜெயமோகனின் ‘வெண்முரசு’வில் வரும் அத்தியாயமே அதற்கு காரணம். இவ்வத்தியாத்தைப் வாசித்தால் நன்கு புரியும். சில முதன்மையான வற்றை மட்டும் வெட்டி எடுத்து மற்றும் ஒரு தனி தளத்தில் போட்டு உள்ளேன்.

வெண்முரசு: வண்ணக்கடல் 40 (சுட்டியைத் தட்டவும்) (Fantastic)
நான் கட்டிய தளம்; வண்ணக்கடல் 40 - பகுதிகள்

எனக்கு சாப்பாட்டின் மீதும், சமையிலின் மீதும் ஆர்வம் இருப்பதற்கு பெரிய காரணம் எனது பாட்டி (எ) பட்டு. அதை ஒரு தவமாகவே கற்பனையுடன் செய்வார்கள் தினமும். 


October 31, 2014

ஆவணி அவிட்டம்

வெண்முரசு   வண்ணக்கடல் 26 (நன்றி ஜெயமோகன்)
                    
முழுமைவெளியில் முடிவிலிக்காலத்தில் பள்ளிகொண்டவன் தன்னை தான் என அறிந்தபோது அவனுடைய அலகிலா உடல் உருவாகியது. அவனுள் எழுந்த முதல் இச்சை அதில் மயிர்க்கால்களாக முளைத்தெழுந்தது. பின்னர் அவன் உடலை மென்மயிர்ப்படலமாக பரவி நிறைத்தது. தன்னுள் மகத் எழுந்து அகங்காரமாக ஆன கணம் அவன் மெய்சிலிர்த்தபோது ஒவ்வொரு மயிர்க்காலும் எழுந்து அவற்றின் நுனியில் மகாபிரபஞ்சங்கள் உருவாயின. அம்மகாபிரபஞ்சங்கள் தன்னுள் தான் விரியும் முடிவிலா தாமரைபோல கோடானுகோடி பிரபஞ்சங்களாயின. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு காலம் நிகழ்ந்தது. அக்காலங்கள் துளிகளாகப்பெருகி மகாகாலத்தில் சென்றணைய குன்றாக்குறையா கடலாக அது அலையின்றி விரிந்துகிடந்தது. அவன் அகம் அணைந்து சிலிர்ப்படங்கும் மறுகணம் மயிர்க்கால்கள் சுருங்க அனைத்து மகாபிரபஞ்சங்களும் அவனிலேயே சென்றணைந்தன.

பிரபஞ்சத்தாமரை என்னும் அனல்குவை வெடித்துக்கிளம்பும் தீப்பொறிகளே விண்ணகங்கள். அவற்றில் புனிதமானது பூமி. அது பிறந்து நெடுங்காலம் உயிரற்ற வெறும் பாறைவெளியாக விண்ணுக்குக்கீழே விரிந்திருந்தது. எவராலும் கேட்கப்படாமையால் பொருளேறாத சொல் என. வணங்கப்படாமையால் தெய்வமாக ஆகாத கல் என. தன்னசைவற்ற அந்தப் பருப்பொருள்மேல் முழுமுதலோனின் விழிபட்டதும் அதற்குள் மகத் விரிந்து அகங்காரமாகியது. தன்னை அது ஐந்தாகப்பிரித்து அறியத்தொடங்கியது. நிலம் நீர் காற்று ஒளி வானம் என்னும் ஐந்தும் ஒன்றின்மேல் ஒன்று கவிந்தன. ஒன்றை ஒன்று நிறைத்தன. ஒன்றை பிறிது வளர்த்தன. ஒளி வானை நிறைத்தது. வானம் மண்ணில் மழையெனப் பெய்தது. மண்ணை காற்று விண்ணிலேற்றியது.

அவ்விளையாடலின் ஒருகணத்தில் விண்ணில்பரவிய ஒளி மழையினூடாக மண்ணை அடைந்து முளைத்தெழுந்து காற்றிலாடியது. இளம்பச்சைநிறமான அந்த உயிர்த்துளியை புல் என்றனர் கவிஞர். நான் என்றது புல்துளியின் சித்தம். இங்கிருக்கிறேன் என்றறிந்தது அதன் மகத். இப்பூமியை நான் ஆள்வேன் என்றது அதன் அகங்காரம். மண் பசும்புல்லெனும் மென்மயிர்ப்பரப்பால் மூடப்பட்டது. அதில் ஒளியும் காற்றும் பட்டபோது பூமி புல்லரித்தது. ஒவ்வொரு புல்லும் ஒவ்வொரு வடிவை கண்டுகொண்டது. நான் அருகு என்றது ஒரு புல். நான் தர்ப்பை என்றது இன்னொன்று. பாலூறிய ஒன்று தன்னை நெல் என்றது. நெய்யூறிய ஒன்று தன்னை கோதுமை என்றது. இன்னொன்று தன்னுள் இனித்து கரும்பானது. பிறிதொன்று தன்னுள் இசைத்து மூங்கிலானது. தன்குளிரை கனியச்செய்து ஒன்று வாழையாகியது. தாய்மை முலைகளாக கனக்க ஒன்று பலாவானது. கருணைகொண்ட ஒன்று கைவிரித்து ஆலாயிற்று. வானம் வானமென உச்சரித்து ஒன்று அரசாயிற்று. மண்வெளி பசுங்காடுகளால் மூடப்பட்டது.

மண்ணை பசுமைகொண்டு இருண்டு பின்னிக் கனத்து மூடியிருக்கும் இவையனைத்தும் புல்லே என்றறிக. புல்லால் புரக்கப்படுகின்றன பூமியின் உயிர்கள். வெண்புழுக்கள், பச்சைப்பேன்கள், தெள்ளுகள், தவ்விகள், கால்கள் துருத்திய வெட்டுக்கிளிகள், விழித்த தவளைகள், செங்கண் உருட்டிக் குறுகும் செம்போத்துக்கள், கரிய சிறகடித்து காற்றில் எழுந்தமரும் காக்கைகள், வானில் வட்டமிடும் கழுகுகள். புல்லை உண்டு வாழ்கின்றன மான்கள், பசுக்கள், சிம்மங்கள், குரங்குகள், மானுடகுலங்கள். புல் சிலிர்த்தெழுகையில் பிறக்கின்றறன உயிர்க்குலங்கள். புல்லடங்குகையில் அவையும் மண்ணில் மறைகின்றன. புல்லில் எழுந்தருளிய அன்னத்தை வாழ்த்துவோம்! புல்லுக்கு வேரான மண்ணை வணங்குக! புல்லில் ரசமாகிய நீரை வணங்குக! புல்லில் ஆடும் காற்றை வணங்குக! புல்லில் ஒளிரும் வானை வணங்குக! புல்லாகி வந்த ஒளியை வணங்குக!

கங்கையின் கரையில் தன் குருகுலத்தில் இருள் விலகாத காலைநேரத்தில் பரத்வாஜ முனிவர் தன் முன் செவியும் கண்ணும் சித்தமும் ஒன்றாக அமர்ந்திருந்த மாணவர்களுக்கு கற்பித்துக்கொண்டிருந்தார். “புல்லை அறிக. புல்லை அறிந்தவன் இப்புவியை அறிந்தவனாகிறான். ஐம்பெரும்பருக்களையும் அறிந்தவனாகிறான். ஆக்கமும் அழிவும் நிகழும் நெறியை அறிந்தவனாகிறான். புல்லைக்கொண்டு அவன் பிரம்மத்தையும் அறியலாகும்” தன்னருகே இருந்த ஒரு கைப்பிடி தர்ப்பைப்புல்லை எடுத்து முன்வைத்து பரத்வாஜர் சொன்னார். “புற்களில் புனிதமானது என தர்ப்பை கருதப்படுகிறது. ஏனென்றால் நீரும் நெருப்பும் அதில் ஒருங்கே உறைகின்றன. வேதங்களை பருப்பொருட்களில் நதிகளும் தாவரங்களில் தர்ப்பையும் ஊர்வனவற்றில் நாகங்களும் நடப்பனவற்றில் பசுவும் பறப்பனவற்றில் கருடனும் கேட்டறின்றன என்று நூல்கள் சொல்கின்றன.”

“குசை, காசம், தூர்வை, விரிகி, மஞ்சம்புல், விஸ்வாமித்திரம், யவை என தர்ப்பை ஏழுவகை. குசை காசம் ஆகிய முதலிரண்டும் வேள்விக்கு உகந்தவை. தூர்வையும் விரிகியும் அமர்வதற்கு உகந்தவை. மஞ்சம்புல் தவச்சாலையின் கூரையாகும். விஸ்வாமித்திரம் போர்க்கலை பயில்வதற்குரியது. யவை நீத்தார் கடன்களுக்குரியது என்பார்கள். நுனிப்பகுதி விரிந்த தர்ப்பை பெண்மைகொண்டது. எனவே மங்கலவேள்விகளுக்கு உகந்தது. அடிமுதல் நுனிவரை சீராக இருப்பது ஆண்மை திரண்டது. அக்னிஹோத்ரம் முதலிய பெருவேள்விகளுக்குரியது அது. அடிபெருத்து நுனிசிறுத்தது நபும்சகத் தன்மைகொண்டது. அது வேள்விக்குரியதல்ல.”

“புனிதமானது இந்த சிராவண மாத அவிட்ட நன்னாள். இதை தர்ப்பைக்குரியது என முன்னோர் வகுத்தனர். இந்நாளில் வேதவடிவமான தர்ப்பையை வழிபட்டு குருநாதர்களை வணங்கி புதியகல்வியைத் தொடங்குவது மரபு. அதன்பொருட்டே இங்கு நாம் கூடியிருக்கிறோம்” என்று பரத்வாஜர் சொன்னதும் அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் கைகூப்பி “ஓம்! ஓம்! ஓம்!” என்றனர். பரத்வாஜர் எழுந்து கைகூப்பியபடி குருகுலமுற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வேள்விமேடைக்குச் சென்றமர்ந்தார். அவரைச்சுற்றி அவரது மாணவர்கள் அமர்ந்துகொண்டார்கள். அரணி கடைந்து நெருப்பை எழுப்பி எரிகுளத்தில் நெருப்பை மூட்டினர். வேதமுழக்கம் எழுந்து பனிமூடிய காடுகளுக்குள்ளும் நீராவி எழுந்த கங்கைப்பரப்பிலும் பரவியது.

வேள்விமுடிந்து எழுந்ததும் பரத்வாஜர் பல்வேறு குலங்களில் இருந்து அங்கே பயில வந்திருந்த இளையமாணவர்களிடம் “இனியவர்களே, இன்று உபாகர்ம நாள். உங்கள் ஒவ்வொருவரையும் தர்ப்பை தேர்ந்தெடுக்கவேண்டும். உங்கள் வாழ்வின் வழிகளை அதுவே வகுக்கவேண்டும். அதன் பின் உங்கள் வாழ்க்கை முழுக்க தர்ப்பை உங்களைத் தொடரும்” என்றார். வேள்விக்களத்தின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பெரிய மண்பீடத்தில் அனைத்துவகை தர்ப்பைகளும் கலந்து விரிக்கப்பட்டிருந்தன. பரத்வாஜர் பீடம் நிறைந்த தர்ப்பைக்கு முன் நின்று வேதமந்திரங்களைச் சொல்லி அதை வணங்கினார். அவரது மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து தர்ப்பையை வணங்கினார்கள்.

May 08, 2014

சீமந்தோன்னயனம்

எழுத்தாளர் ஜெயமோகனின் (மூலம்) வெண்முரசுவில் இருந்து ...
ஆதி மூலம்: http://venmurasu.in/

அரசி, குழந்தைக்கான சடங்குகளை கருபுகும் கணம் முதல் வகுத்துள்ளன நூல்கள். பார்த்திவப் பரமாணு கருபுகும் நாள் கர்ப்பதாரணம் எனப்படுகிறது ‘நான் யார்?’ என அது வினவுகிறது. ‘நீ இப்பிறவியில் இக்கரு’ என உடல் விடைசொல்கிறது. அதன்பின் கரு ஊனையும் குருதியையும் உண்டு வளர்ந்து ‘நான் இங்கிருக்கிறேன்’ என தன்னை அறிகிறது. அது முதல்மாதத்தில் அணுவுடல் கொண்டிருக்கிறது. இரண்டாம் மாதத்தில் புழுவுடல். மூன்றாம் மாதத்தில் மீனுடல். நான்காம் மாதத்தில் வால்தவளையின் உடல். ஐந்தாம் மாதத்தில் மிருக உடல். ஆறாம் மாதத்தில்தான் மானுட உடல் கொள்கிறது. அதற்கு மனமும் புத்தியும் அமைகிறது. முந்தையபிறவியின் நினைவுகளால் துயருற்றும் தனிமையுற்றும் கைகூப்பி வணங்கியபடி அது தவம்செய்யத்தொடங்குகிறது.

ஆகவே ஆறாவது மாதத்தில் சீமந்தோன்னயனம் என வகுத்துள்ளனர் முன்னோர். அப்போதுதான் வயிற்றில் வளரும் கருவுக்கு கைகால்கள் முளைக்கின்றன. அது வெளியுலக ஒலிகளை கேட்கத்தொடங்குகிறது. ஒரு மனித உடலுக்குள் இன்னொரு மனிதஉடல் வாழ்கிறதென்று காட்டுவதற்காக அன்னையின் நெற்றிவகிடை இரண்டாகப்பகுத்து நறுமணநெய்பூசி நீராட்டுவதே சீமந்தோன்னயனம் என்கின்றனர். அன்று வேள்வித்தீ வளர்த்து திதி தேவிக்கு காசியபரிடம் பிறந்த ஏழு மருத்துக்களுக்கும் முறைப்படி அவியளித்து வரவழைத்து தர்ப்பை, மஞ்சள்நூல், குதிரைவால்முடி, யானைவால்முடி, பனையோலைச்சுருள், வெள்ளிச்சரடு, பொற்சரடு ஆகியவற்றில் அவர்களைக் குடியமர்த்தி அன்னையின் உடலில் காப்புகட்டி தீதின்றி மகவு மண்ணைத்தீண்ட நோன்புகொள்வார்கள்.

சீமந்தோன்னயனத்துக்கு பெண்கள் மட்டுமே செல்லமுடியும். என் துணைவி சென்றுவிட்டு மீண்டு என்னிடம் அங்கு கண்டதைச் சொன்னாள். அவள் கண்டது முற்றிலும் புதிய காந்தார அரசியை. அவளுடைய வலிவின்மையும் சோர்வும் முற்றாக விலகி நூறுபேரின் ஆற்றல் கொண்டவளாக ஆகிவிட்டிருந்தாள். வயிறுபுடைத்து பெருகி முன்னகர்ந்திருக்க அவள் பின்னால் காலெடுத்துவைத்துவரும் பசுவைப்போலிருந்தாள் என்றாள். அரண்மனைக்கூடத்துக்கு அவள் நடந்துவந்த ஒலி மரத்தரையில் யானைவருவதுபோல அதிர்ந்தது என்றும் அவள் உள்ளே நுழைந்தபோது தூணில் தொங்கிய திரைகளும் மாலைகளும் நடுங்கின என்றும் சொன்னாள்.

May 01, 2014

ஏன் நாம் ஒரு தவறை பலமுறை தெரிந்தே செய்கிறோம் ?

எழுத்தாளர் ஜெயமோகனின் (மூலம்) வெண்முரசுவில் இருந்து ...
ஆதி மூலம்: http://venmurasu.in/

சீடனாகிய சுகுணன் பெருமூச்சுவிட்டு “ஓம்” என்றான். கபிலர் “யாருடைய வரவென நான் அறியலாமா?” என்றார். “என் பெயர் கிந்தமன். காசியபகுலத்தில் குஞ்சரர் என்னும் முனிவருக்கு அப்சரகன்னியில் பிறந்தவன்” சீடனின் வாயிலிருந்து நடுவயதான ஒருவரின் குரல் எழுந்ததைக் கண்டு மாத்ரி திகைத்து மூச்சை இழுத்தாள். “தாங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என அறியலாமா?” என்றார் கபிலர். சுகுணன் “நான் இங்கு அழைக்கப்பட்டேன். இங்கே விழுந்துள்ள விதியின் முடிச்சொன்றை நான் அவிழ்க்கவேண்டுமென விதியே ஆணையிட்டது” என்றான்.

“தங்கள் சொற்களுக்காகக் காத்திருக்கிறோம் முனிவரே” என்றார் கபிலர். சுகுணன் “சந்திரகுலத்தில் விசித்திரவீரிய மன்னரின் மைந்தனாகப்பிறந்த இம்மன்னர் பாண்டு எனக்கு பெரும் தீங்கொன்றை இழைத்தார்” என்றான். பாண்டு திகைப்புடன் எழுந்துகொண்டான். “முதிரா இளமையில் கூதிர்காலத்தில் இமயமலையின் அடிவாரத்திலுள்ள பிங்கலவனம் என்னும் குறுங்காட்டில் அஸ்தினபுரியின் இளவரசரான பாண்டு தன்னுடைய இருபது வேட்டைத்துணைவர்களுடன் யானைமீதமர்ந்து வேட்டைக்குச் சென்றிருந்தார்” என்று சுகுணன் சொன்னதும் பாண்டு அச்சம் குடியேறிய கண்களுடன் அமர்ந்துகொண்டான்.

“அந்த வேட்டையில் பாண்டுவால் ஓடும் செந்நாய்களையோ துள்ளும் மான்களையோ பதுங்கும் முயல்களையோ வேட்டையாடமுடியவில்லை. அவரது விழிகளுக்கு கூர்மையில்லை. அவரது அம்புகள் விழிகளைத் தொடரவும் முடியவில்லை. தன்னால் வேட்டையாடமுடியாதென்று அவர் உணர்ந்தார். ஒருவேட்டைமிருகமாவது கையிலில்லாமல் கானகத்திலிருந்து திரும்பக்கூடாதென அவர் எண்ணியபோது பசும்புதர்களுக்கு அப்பால் இரண்டு மான்கள் நிற்பதைக் கண்டு வில்குலைத்தார்.”

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“அப்போது வேட்டைத்துணைவனான குங்குரன் என்ற முதியவன் அரசே, அவை இணைமான்கள், அவற்றைக் கொல்ல வேட்டைத்தெய்வங்களின் ஒப்புதலில்லை என்றான். மிகவும் இளையவராகிய பாண்டு சினத்துடன் திரும்பி அதை நான் அறிவேன், ஆனால் இன்று ஒருவேட்டையேனும் இல்லாமல் திரும்புவதைவிட இந்தப்பாவத்தைச் செய்யவே விரும்புகிறேன் என்று கூவியபடி தன் வில்லை நாணேற்றி தொடர்ச்சியாக ஐந்து அம்புகளால் அந்த மான்களை வீழ்த்தினார்.”

சுகுணன் சொன்னான் “அந்த மான்கள் அம்புபட்டு அலறிவிழுந்தபோது அவற்றின் குரல் மானுடக்குரல் போலவே இருக்கிறது என்று பாண்டு நினைத்தார். வேட்டைத்துணைவர்களும் அவ்வண்ணமே நினைத்தனர். உண்மையில் அது மானுடனாகிய நானும் என் துணைவியாகிய கௌசிகையும்தான்.” பாண்டு நடுங்கும் கைகளை ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொண்டு வெளுத்த உதடுகளுடன் அமர்ந்திருந்தான். சாளரத்திரைச்சீலைகள் காற்றில் பறந்து அமைந்தன.

“முற்பிறவியில் நான் தித்திரன் என்னும் முனிவனாக இருந்தேன். ஐந்துவயதிலேயே ஞானம்தேடி கானகம் சென்று கடுந்தவம் செய்து உடல்துறந்து விண்ணகமேகினேன். ஏழு பிரம்ம உலகங்களை என் தவத்தால் கடந்து நான் விண்ணளந்தோன் வாழும் வைகுண்டத்தின் பொற்கதவம் முன் நின்றேன். அங்கே காவல்நின்றிருந்த ஜயனும் விஜயனும் என்னை அதிலிருந்த சின்னஞ்சிறு துளைவழியாக உள்ளே செல்லும்படி ஆணையிட்டனர். நான் உடலைச்சுருக்கி நுண்வடிவம் கொண்டு உள்ளே நுழைந்தேன். என் இடதுகையின் கட்டைவிரல் மட்டும் உள்ளே நுழையாமல் வெளியே நின்றுவிட்டது.”

”திகைத்து நின்ற என்னை நோக்கி ஜயவிஜயர் முனிவரே உங்கள் ஆழத்தின் அடித்தட்டில் முளைக்காத விதை ஏதோ ஒன்று உள்ளது. அனைத்தும் முளைத்துக் காய்த்துக் கனிந்தவர்களுக்கன்றி வைகுண்டத்தில் இடமில்லை என்றனர். நான் என் அகத்தை கூர்ந்து நோக்கியபோது என்னுள் கடுகை பல்லாயிரத்தில் ஒன்றாகப் பகுத்தது போல சின்னஞ்சிறு காமவிழைவு எஞ்சியிருப்பதைக் கண்டேன். அதை நிறைக்காமல் என்னால் உள்ளே நுழையமுடியாதென்று உணர்ந்தேன். முனிவரே இங்கே ஒருகணமென்பது மண்ணில் ஏழு பிறவியாகும். சென்று வாழ்ந்து நிறைந்து மீள்க என்றனர் ஜயவிஜயர்.”

“நான் காட்டில் நீத்த உடல் மட்கி மறைந்த மண்மீது அமர்ந்து தவம்செய்த குஞ்சரர் என்னும் முனிவரின் சித்தத்தில் குடியேறி அவர் விந்துவில் ஊறி பாத்திவப் பிந்துவாக ஆனேன். காமம் எழுந்து விழிதிறந்த குஞ்சரர் அந்தவனத்தில் மலருண்ண வந்த சதானிகை என்னும் அப்சரகன்னி ஒருத்தியைக் கண்டார். அவளை நான் அவருடலில் இருந்து அழைத்தேன். அவ்வழைப்பைக்கேட்டு அவள் அருகே வந்தாள். அவளுடன் அவர் இணைந்தபோது நான் என் உருவை மீண்டும் அடைந்தேன். கிந்தமன் என்ற மகனாகப் பிறந்து அவரது தழைக்குடிலில் வளர்ந்தேன்.”

“என் முதிராஇளமையில் ஒருநாள் தந்தை சொற்படி ஊழ்கத்தில் இருக்கையில் வைகுண்டவாயில் முன்னால் ஒரு எளிய கற்பாறையாகக் கிடந்த தித்திரனை நான் கண்டேன். நான் யாரென்று உணர்ந்தேன். என் இடக்கையின் கட்டைவிரலை என் தவத்தால் அழகிய இளம்பெண்ணாக ஆக்கிக்கொண்டேன். அவளுக்கு கௌசிகை என்று பெயரிட்டு என் துணைவியாக்கினேன். அவளுடன் காமத்தை முழுதறியத் தலைப்பட்டேன். ஒருபிறவியிலேயே எழுபிறப்பின் இன்பத்தையும் அறிந்து கனிய எண்ணினேன்.”

“என் இனிய துணைவி கௌசிகையும் நானும் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்னும் நால்வகை உயிர்களாகவும் வடிவெடுத்து காமத்தை அறிந்துகொண்டிருந்தோம். மானாக அந்த அழகிய பிங்கலவனத்தில் துள்ளிக்குதித்தும், தழுவியும் ஊடியும், சுனைநீர் அருந்தியும், நறும்புல்தளிர்களை உண்டும் மகிழ்ந்தோம். இணைசேர்ந்து முழுமையை அறிந்துகொண்டிருந்த கணத்தில் பாண்டுவின் அம்புபட்டு எங்கள் காமத்தவம் கலைந்தது. உடலும் உள்ளமும் பிரிந்து நாங்கள் விழுந்தோம். எங்கள் உடல்களை பாண்டுவின் வேட்டைக்குழு எடுத்துச்செல்வதை அந்தக் காட்டின் காற்றுவெளியில் நின்றபடி திகைத்து நோக்கிக்கொண்டிருந்தோம்.”

பாண்டு எழுந்து கைகளை வீசி “நான் ஓர் அரசனுக்குரிய செயலையே செய்தேன்! வேட்டையும் போரும் அரசனுக்குப் பாவமல்ல” என்று சிதறிய குரலில் கூவினான். சீற்றத்துடன் அவனைநோக்கித் திரும்பிய சுகுணன் “ஆம், அது நெறி. ஆனால் அந்நெறிதான் இணைசேர்ந்திருக்கும் உயிர்களையும் துயிலில் இருக்கும் உயிர்களையும் கொல்லலாகாது என்று விலக்குகிறது. புணரும் உயிரின் விந்துவில் வாழும் உயிர்களை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை. கனவில் எழும் மூதாதையரைக் கலைக்கவும் எவருக்கும் உரிமை இல்லை” என்றான். அந்தச்சீற்றத்தைக் கண்டு பாண்டு முகம் சிவக்க கண்கள் நீர் நிறைய அப்படியே அமர்ந்துவிட்டான்.

“காமமும் கனவும் அனைத்துயிருக்கும் உரிமைப்பட்டவை. காமத்திலும் கனவிலும் உயிர்களின் அகம் பெருகுகிறது. அப்போது ஓர் உடலை அழிப்பவன் இரு அகங்களை அழிக்கிறான். அவன் அந்த இரண்டாவது அகத்திற்கான பொறுப்பை ஏற்றே ஆகவேண்டும். நீ பிழைசெய்துவிட்டாய். ஆகவே என் சாபத்தை நீ அடைந்தேயாகவேண்டும்.” பாண்டுவின் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு கன்னங்களில் வழிந்தது. அவன் உதடுகளை அழுத்தியபடி கைகூப்பினான்.

வளையலோசை கேட்டு குந்தி நிமிர்ந்து அம்பாலிகையைக் கண்டாள். அவள் கண்களில் தெரிவதென்ன என்று அவளால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அறியாத விண்ணாழத்தில் இருந்து மண்ணுக்குவந்த தெய்வம் போல அவள் தோன்றினாள். நகைக்கிறாளா அழுகிறாளா என்று அறியமுடியாதபடி முகம் விரிந்திருக்க உதடுகள் இறுக்கமாக ஒட்டியிருந்தன.

“அன்று அந்தக் காற்றுவெளியில் நின்றபடி நான் தீச்சொல்லிட்டேன். நீ ஒருநாளும் காமத்தை அறியமாட்டாய் என்றேன். காமத்தை உன் உடலும் உள்ளமும் அறிந்துகொண்டிருக்கும். தீப்பற்றிக்கொள்ளாத அரணிக்கட்டை போல உன் அகம் முடிவில்லாது உரசிக்கொண்டிருக்கும். அவ்வெம்மையில் நீ தகிப்பாய். என்னைப்போலவே உன் உள்ளம் கவர்ந்த தோழியையும் நீ அடைவாய். ஆனால் அவளுடன் கூடும்போது அக்காமம் முதிராமலேயே நீ உயிர்துறப்பாய்.”

பாண்டு கைகூப்பியபடி “நான் அச்செயலைச் செய்யும்போதே அதன் விளைவையும் அறிந்திருந்தேன் என இன்று உணர்கிறேன் முனிவரே. அது நோயுற்ற குழந்தையின் வன்மம். இயலாத உடலில் கூடும் குரூரம். என் அகம் மீறிச்செல்ல விழைந்துகொண்டிருந்த வயது அது. என் உடலின் எல்லைகளை என் அகத்தின் எல்லைகளை நான் கற்பனையால் கடந்துசென்றுகொண்டிருந்தேன். அந்த விசையால் அறத்தின் எல்லைகளையும் கடந்துசென்றிருக்கிறேன். கடந்துசெல்லும்போது மட்டுமே நான் இருப்பதை நான் உணர்ந்தேன். எனக்கும் வலிமையிருக்கிறது என்று அறிந்தேன்.”

தலையை தன் கைகளில் சேர்த்து முகம் குனித்து தளர்ந்த குரலில் பாண்டு தொடர்ந்தான் “அந்த நாளை இன்றும் நினைவுகூர்கிறேன். இணைசேர்ந்து நின்ற மான்களை நான் ஏன் கொன்றேன்? வேட்டைக்காக மட்டும் அல்ல. அது மட்டும் அல்ல. அவை நின்றிருந்த இன்பநிலைதான் அதற்குக் காரணம். ஆம், அதுதான். அவற்றைக்கொல்ல நான் எண்ணிய கணம் எது? அவற்றில் அந்த ஆண்மான் உடலின்பத்தில் திளைத்து தன் பெரிய பீலிகள் கொண்ட இமைகளைத் தாழ்த்தி கண்மூடியது. அதைக்கண்ட கணமே நான் என் அம்புகளை எடுத்துவிட்டேன்.”

“அம்புகள் ஒன்றன் மீது ஒன்றாக மான்களைத் தைத்தன. ஐந்து அம்புகள். முதல் அம்பு என் கையை விட்டெழுந்தபோது என் அகம் குற்றவுணர்வு கொண்டு சுருண்டது. ஆனால் அடுத்த அம்பு அக்குற்றவுணர்ச்சியைச் சிதறடித்தது. என் உடல் உவகையில் அதிர்ந்தது. அதுவும் ஒரு காமம் என்பதைப்போல. அடுத்தடுத்த அம்புகள் வழியாக நான் இன்பத்தின் உச்சம் நோக்கிச் சென்றேன். என் கண்கள் கலங்கி உடல் சிலிர்த்துக்கொண்டிருந்தது. பாவம் போல பேரின்பம் வேறில்லை என அன்று அறிந்தேன். ஏனென்றால் பாவம்செய்பவன் தன்னைப் படைத்த சக்திகளை பழிவாங்குகிறான்.”

“அம்புகள் தசையில் சென்று குத்திநிற்பதை, அந்தத் தசைகள் அதிர்ந்து துடிப்பதை, குருதி மெல்லத்தயங்கி ஊறிக்கசிவதை, அம்பின்விசையில் நிலைதடுமாறி அவை எட்டுகால்களும் மாறிமாறி ஊன்ற சரிந்து மண்ணில் விழுவதை அவற்றின் இளமையான வால்களும் விரிந்த காதுகளும் துடிப்பதை நீள்கழுத்துக்கள் மண்ணில் எழுந்து விழுந்து அறைபடுவதை ஓடுவதைப்போல குளம்புகள் காற்றில் துழாவுவதை இத்தனைநாளுக்குப்பின்னும் கனவு என துல்லியமாக நினைவுறுகிறேன்.”

“அப்போதும் அவற்றின் உடல் இணைந்திருந்தது” என்றான் பாண்டு. “ஆம், அதை நான் மறக்கவேயில்லை. ஒவ்வொரு முறை நினைவுகூரும்போதும் என் உடலை அதிரச்செய்வது அதுதான். அவை இணைந்தே இறந்தன. நான் நேற்று மாத்ரியுடன் இருக்கையில் என் அகம் முழுக்க நிறைந்திருந்த காட்சியும் அதுவே. நினைவிழந்து சரிவதற்கு முன் நான் இறுதியாக எண்ணியது அதைப்பற்றித்தான்.”

சத்யவதி “தவசீலரே, வரமருளவேண்டும். பாவங்களனைத்தும் பொறுத்தருளப்படும் பேருலகைச் சேர்ந்தவர் நீங்கள். தங்கள் சினம் தணியவேண்டும். என் குழந்தைக்கு தங்கள் அருளாசி வேண்டும்” என்று கைகூப்பினாள். “பேரரசி, அக்கணத்துக்கு அப்பால் நான் சினமேதும் கொள்ளவில்லை. அக்கணமெனும் மாயையை கடந்ததுமே வாழ்வும் மரணமும் ஒன்றே என்றறிந்துவிட்டேன். ஆனால் பிழையும் தண்டனையும் ஒரு நிறையின் இரு தட்டுகள். அவை என்றும் சமன்செய்யப்பட்டிருக்கவேண்டும். அவற்றை மீற தெய்வங்களாலும் ஆகாது” என்றான் சுகுணன்.

சுகுணன் “நேற்றைத் திருத்த எவராலும் இயலாது என்பது வாழ்வின் பெருவிதி. அதை அறிபவர் கூட நாளையைத் திருத்த இக்கணத்தால் முடியும் என்ற பெருவிந்தையை அறிவதில்லை” என்று தொடர்ந்தான். “உங்கள் சிறுமைந்தனுக்கு என் அருளாசிகளை அளிக்கிறேன். அவன் மைந்தரால் பொலிவான். இழந்த காமத்தின் பேரின்பத்தை பலநூறுமடங்காக பிள்ளையின்பத்தால் நிறைப்பான். போர்முதல்வனும் அறச்செல்வனும் ஞானத்தவத்தவனும் சென்றடையும் முழுமையின் உலகையும் இறுதியில் சென்றடைவான். அவனுடன் காமநிறைவடையாத பெண் எவளோ அவள் அவனை அவ்வுலகுக்கு வழிகாட்டி அழைத்துச்செல்வாள். தன் பொற்கரங்களால் அவனுடைய அனைத்து வாயில்களையும் அவளே திறந்துகொடுப்பாள். ஆம், அவ்வாறே ஆகுக!”

March 28, 2014

சூக்‌ஷ்மகதனம்

பெரும்பாலான ஆயர்கள் அறிவார்கள். நாங்கள் தனித்து விலகி காட்டுக்குள் நிற்கும் பசுவை அருகே அழைப்பதற்கு அதன் உடலைக் கூர்ந்து நோக்கி ‘பார், பார், பார்’ என அகத்துக்குள் சொல்லிக்கொள்வோம். நம் அகவல்லமையை முழுக்க அந்தச் சொல்லில் குவித்தால் நாம் பார்வையைக் குவித்திருக்கும் பசுவின் உடற்பகுதியின் தோல் சிலிர்த்து அசையும். பசு திரும்பி நம்மை நோக்கும். நாம் அதன் கண்களைப்பார்த்து அருகே வா என்றால் அருகே வரும்’ என்றேன். ‘சிறுவயதிலேயே இவ்வித்தையை நானும் என் தமையனும் கற்றோம். அதை நான் மானுடரிலும் விரிவாக்கிக் கொண்டேன்’ என்றேன்.

முனிவர் வியப்புடன் “பெண்ணே, நான் இப்போது இச்சுவடியில் கற்றறிந்துகொண்டிருந்ததும் அதே வித்தையைத்தான். சூக்‌ஷ்மகதனம் என்று இதை முனிவர்கள் சொல்கிறார்கள். ஒரு மனம் இன்னொரு மனத்துடன் குரலில்லாமலேயே உரையாடமுடியும். அணுக்கள் பூச்சிகள் புழுக்கள் போன்ற சிற்றுயிர்கள் அவ்வாறு ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கின்றன. உயிர்களின் அறிவும் மொழியும் விரிவடையும்தோறும் அத்திறன் இல்லாமலாகிறது. சித்தம் ஒருங்கமைந்த மனிதர்களிடம் அத்திறன் முற்றிலும் இல்லை” என்றார்.

“ஆனால் நம்மனைவருக்கும் உள்ளே நம் அறிவின் அலைகளுக்கு அடியில் அந்த முதற்பேராற்றல் உறைந்திருக்கிறது. குழந்தை அழுவதற்கு ஒருகணம் முன்னரே அன்னை அது அழப்போவதை உணர்ந்துகொள்கிறாள். காதல்கொண்ட மனங்கள் ஒன்றாகின்றன. தியானத்திலமரும் முனிவர்களின் உள்ளங்கள் ஒற்றைப்பெரும்படலமாக ஆகின்றன. சித்த அலைகளை அடக்கி அந்த ஆற்றலை உள்ளிருந்து துயிலெழுப்புவதையே சூக்‌ஷமகதனம் என்று சொல்கிறோம்” என்றார் முனிவர்.

நான் வியப்புடன் அதைப்பற்றி கேட்டேன். “அதன்மூலம் மனிதர்களின் உள்ளங்கள் ஒன்றாக முடியும். வேதங்கள் உங்கள் உள்ளங்கள் சுருதியால் ஒன்றாகட்டும் என அறைகூவுவது இதைப்பற்றித்தான். ஆயிரமாண்டுகாலமாக மானுடஞானம் மண்ணுக்கு அடியில் விரிந்திருக்கும் அந்தக் கடலைக் கண்டடைவதற்காகவே முயன்றுகொண்டிருக்கிறது. நான் தவம்செய்யப்போவதும் அந்த ஆலயவாயில் முன்புதான்” என்றார் துர்வாசர்.

March 18, 2014

அனசூயை - தத்தாத்ரேயன்

ஜெயமோகனின் வெண்முரசுவில் இருந்து...

பொறாமையை வெல்லும் பொறைநிலையோ கலையின் முதிர்நிலையே ஆகும். அனசூயை வாழும் பிரஜாபதியின் துணைவியாக பல்லாயிரம் மண்ணகங்களை தன் மடியில் தவழும் குழந்தைகளைப்போல காத்துவந்தாள். அன்றொருநாள் பூமி மீது இந்திரன் சினம் கொண்டான். வானில் அவன் வில் தோன்றாமலாயிற்று. தன் வஜ்ராயுதத்தை வளைதடியாக்கி மேகக்கூட்டங்களை வெள்ளாடுகளைப்போல அவன் ஓட்டிச்சென்று மேற்குத்திசையின் இருண்ட மடிப்பு ஒன்றுக்குள் ஒளித்துவைத்தான். மழையின்மையால் பூமி வெந்து வறண்டது. தாவரங்கள் பட்டு கருகின. கங்கை மணல்வரியாக மாறியது.

வைதிகர் தேவர்களுக்கு அவியிட்டு மும்மூர்த்திகளையும் வணங்கி காக்கும்படி மன்றாடினர். நாகர்கள் தங்கள் முதுநாகத்தெய்வங்களுக்கு பலிகொடுத்து வெறியாட்டாடி வணங்கினர். மானுடர் தங்கள் தேவர்களை வணங்க ஊர்வனவும் பறப்பனவும் நடப்பனவும் நீந்துவனவும் தங்கள் தெய்வங்களை வணங்கி மன்றாடின. மும்மூர்த்தியரும் தேவர்களும் இந்திரனைத் தேடி அலைந்தனர். அவனோ விண்ணக இருளுக்குள் ஒளிந்திருந்தான்.

நெய்யகன்ற அகலென பூமி தன் ஒளியவிந்து அணையும் நாளில் மண்ணில் வாழ்ந்த எளிய புழு ஒன்று தான் புழுவென்றறிந்தமையால் பொறாமையை வென்றது. அது தாகத்தால் வாடி இறக்கும் கணத்தில் அனசூயையை வேண்டியது. அன்னையே நான் இறப்பினும் என்குலம் அழியாது காத்தருள்க என்றது.

அதன் கோரிக்கையை அன்னை ஏற்றாள். அவள் கருணை மண்மீது மழையாகப் பொழிந்தது. மண்ணில் அனைத்துத் தாவரங்களும் எழுந்து விரிந்து தழைத்து மலர்ந்து கனிந்து பொலிந்தன. தேவர்கள் கோர அன்னை கருணைகொண்டாள். அவள் தவத்தாணையால் விண்ணிலும் மண்ணிலும் பத்து வெளியக நாட்கள் இருள் நிறைந்தது. விண்ணகம் இருளானபோது ஒளிந்திருந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்துடன் வெளியே வந்தான். அவனை தேவர்கள் கண்டடைந்தனர். தேவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்திரன் கனிந்து மழைமுகில்களை விடுவித்தான்.

அந்நாளில் கைலாயத்துக்குச் சென்ற நாரதர் முக்கண்முதல்வனை வணங்குவதற்கு முன்பு அனசூயையை எண்ணி வணங்கினார். அதற்குக் காரணம் என்ன என்று சிவன் கேட்டபோது மும்மூர்த்திகளும் தோற்ற இடத்தில் வென்றவள் அனசூயை அல்லவா, அவள் வல்லமையே முதன்மையானது என்றார் நாரதர். அவ்வண்ணமே சொல்லி மும்மூர்த்திகளையும் யோகத்திலிருந்தும் துயிலிலில் இருந்தும் மோனத்திலிருந்தும் எழச்செய்தார். அனசூயையின் வல்லமையை அறிவதற்காக மும்மூர்த்திகளும் அத்ரி முனிவரின் தவச்சாலைக்கு மூன்று வைதிகர்களாக வந்தனர். தங்களுக்கு தாங்கள் விரும்பியவண்ணமே உணவளிக்கவேண்டுமென்று கோரினர். அவ்வண்ணமே ஆகுக என்று சொன்ன அத்ரி பிரஜாபதி தன் துணைவியிடம் அவர்கள் கோரும்படி உணவளிக்க ஆணையிட்டார்.

வான்கங்கையாடி உணவுண்ண வந்தமர்ந்த மூன்றுவைதிகர்களும் அனசூயையிடம் தங்களுக்கு குலப்பெண் ஆடையின்றி வந்து அன்னமிடுவதே நெறி என்றனர். கணவனின் ஆணையையும் கற்பின் நெறியையும் ஒரேசமயம் அவள் எப்படி காத்துக்கொள்கிறாளென்று அறிய அவர்கள் விழைந்தனர். அனசூயை அவர்கள் மூவரையும் தன் புல்லை அமுதாக்கும் காமதேனுவின் கைநீட்டி நெஞ்சுடன் அணைத்துக்கொண்டாள். அவர்கள் கண்களில் பால்படலம் மறையாத கைக்குழந்தைகளாக மாறி அவள் மடியில் தவழ்ந்தனர். அவள் ஆடையின்றி வந்து மூவருக்கும் முலையமுதூட்டினாள்.
அவர்கள் அவள் மடியில் மதலைகளாக வாழ்ந்தனர். முதல்பொருளின்றிப் பிறந்த மூலவர்கள் அவள் வழியாகவே அன்னையின் பேரன்பை அறிந்து களித்தனர். முத்தொழிலை ஆற்றும்பொருட்டு அவர்கள் மீண்டும் தங்களுருக்கொண்டபோதிலும் அன்னையின் அன்பை முழுதறியும் பொருட்டு அவள் உதரத்திலேயே ஒரேகுழந்தையாகப் பிறந்தனர். அந்த மகவு தத்தாத்ரேயன் என்றழைக்கப்பட்டது.

மும்மூர்த்திகளையும் மூன்று முகங்களாகக்கொண்டு ஆறுகரங்களுடன் பிறந்த தத்தாத்ரேயர் இளமையிலேயே நான்கு அறங்களையும் துறந்தார். ஐம்புலன்களையும் வென்றார். களைவதொன்றுமில்லாத நெஞ்சுகொண்டிருந்தமையால் அவர் அறியவேண்டியதென்று ஏதுமிருக்கவில்லை. ஞானங்களின் கொடுமுடியான வேதங்களைக் கற்கும்பொருட்டு தன் தந்தையான பிரம்மதேவனைத் தேடிச்சென்றார் தத்தாத்ரேயர். அவரைக்கண்டதும் பிரம்மனின் கையில் வாடாததாமரைகளாக மலர்ந்திருந்த நான்கு வேதங்களும் தத்தாத்ரேயரின் உடலில் வீசிய அன்னையின் முலைப்பால் வாசனையை உணர்ந்து நான்கு நாய்களாக மாறி அவரைத் தொடர்ந்தன.

“மும்மூர்த்திகளையும் முலையூட்டி வளர்த்தவளை வாழ்த்துவோம். பிரம்மத்தை ஞானமாக பெற்றெடுத்தவளை வாழ்த்துவோம். பிறிதொன்றிலாத பார்வை கொண்ட அனசூயை அன்னையை வாழ்த்துவோம். ஆம், அவ்வாறே ஆகுக!”

February 12, 2014

சுப்ரை

இன்று எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசுவில் (மகாபாரதம் தமிழில் மறு ஆக்கம்) சுப்ரை என்ற ஒரு பறவையை பற்றிய ஒரு (தாய்மை பற்றிய) கதைப் படித்தேன். மிக அருமையாக இருந்தது.

அந்த கதையை இங்கு வெட்டி ஒட்டி உள்ளேன்.

சுட்டிகள் (சொடுக்கலாம்)

முன்னொரு காலத்தில் இந்திராவதி என்னும் ஆற்றின் கரையில் கௌரன் என்னும் சாதகப் பறவை தன் துணையுடன் வாழ்ந்து வந்தது. மழைநீரை வானிலிருந்து அருந்தும் சாதகப்பறவை பிற உயிர்கள் அறியாத ஆற்றிடைக்குறைக்குச் சென்று அங்குள்ள மரப்பொந்தில் முட்டையிடும் வழக்கம் கொண்டது. தந்தை அமைக்கும் மரப்பொந்துக்குள் சென்று அமரும் தாய்ப்பறவை உள்ளே முட்டையிட்டு இறகுகளால் பொத்தி அடைகாக்கும். ஆண்பறவை பறந்துசென்று இரைதேடிக்கொண்டுவந்து தன் துணைக்கு உணவூட்டும்.

காட்டெருதின் கொம்புகளைப் பிணைத்ததுபோல் அலகுள்ள சாதகப்பறவையான கௌரன் தன் துணைவி சுப்ரை ஐந்து முட்டைகளுடன் மரப்பொந்துக்குள் முட்டைமீதமர்ந்து தவம் செய்யத்தொடங்கியதும் அதை உள்ளே வைத்து தன் உடற்பசையால் மூடியது. பின்பு காட்டுக்குள் சென்று உணவுகொண்டு வந்தது. நாற்பத்தொருநாட்கள் அவ்வாறு கௌரன் தன் மனைவிக்கு ஊட்டியது. ஒருநாளில் நூறுமுறை அது உணவுடன் வந்தது. கிடைக்கும் உணவில் ஏழில் ஒருபங்கை மட்டுமே அது உண்டது. மெலிந்து சிறகுகளை வீசும் வல்லமையை இழந்தபோதிலும் கௌரன் சோர்வுறவில்லை.

ஒருநாள் வானில் உணவுதேடிச்சென்ற கௌரன் சிறகு ஓய்ந்து ஒரு மரத்தில் அமர்ந்திருக்கையில் ஒரு வேடன் அதை அம்பெய்து வீழ்த்தினான். இறகுகள் முழுக்க உதிர்ந்து கருக்குழந்தைபோல ஆன சுப்ரை சிறகுகள் முளைக்காமல் புழுக்கள் போல நெளிந்த சிறு குஞ்சுகளுடன் மரப்பொந்தில் காத்திருந்தது. ஐந்து குஞ்சுகளும் தீராப்பெரும்பசியுடன் அன்னையை முட்டி உணவுக்காகக் குரலெழுப்பின. இரண்டுநாள் காத்திருந்தபின் சுப்ரை என்ன நடந்திருக்குமென புரிந்துகொண்டது.



சுப்ரை தன் குஞ்சுகளிடம் சொன்னது, ‘குழந்தைகளே, இந்த ஆற்றிடைக்குறையில் இருந்து நாம் தப்ப ஒரேவழிதான் உள்ளது. நீங்கள் என்னை உண்ணுங்கள். முதலில் என் குருதியைக் குடியுங்கள். பின்பு என் கால்களை உண்ணுங்கள். அதன்பின் என் கைகளை. என் இதயத்தை கடைசியாக உண்ணுங்கள். உங்கள் சிறகுகள் வளர்ந்ததும் பறந்துசெல்லுங்கள். என்னை நீங்கள் சிறிதும் மிச்சம் வைக்கலாகாது.’

அன்னையின் ஆணைப்படி ஐந்து குஞ்சுகளும் அதனை உண்டன. அதன் குருதியை அவை குடித்து முடித்ததும் சுப்ரை வெளுத்து வெண்ணைபோல ஆகியது.  அவை அதன் கால்களையும் கைகளையும் உண்டன. கடைசியாக மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த இதயத்தை உண்டன. அன்னையை சற்றும் மிச்சமில்லாமல் உண்டு முடித்த அவை புதியசிறகுகளுடன் வானில் எழுந்து பறந்து சென்றன. அந்த ஐந்து குஞ்சுகளில் ஒன்றுக்கு மட்டும் அன்னையின் கடைசி ஆணை நினைவில் இருந்தது. அது திரும்பி வந்தது. அந்தப்பொந்தில் அன்னையின் வாசனை எஞ்சியிருப்பதை அதுமட்டும்தான் அறிந்தது. அதை எப்போதும் போக்கமுடியாதென்பதை புரிந்துகொண்டது.

தேவருலகு நோக்கி ஒளிமிக்கச் சிறகுகளுடன் பறந்துகொண்டிருந்த சுப்ரையை மூதாதையரின் உலகில் கௌரன் சந்தித்தது. ‘நான் உன் துணைவன்.. என் சிறகுகள் ஏன் ஒளிபெறவில்லை?’ என்று கேட்டது. ‘நான் மண்ணில் தாய்மையின் பேரின்பத்தை அடைந்து முழுமைகொண்டேன். என் பிறவிக்கண்ணி அறுந்தது’ என்றது சுப்ரை. ‘ஆம், நான் என் இச்சை அறாமல் இறந்தேன்’ என்றது கௌரன். ‘நீ மண்ணில் மீண்டும் பிறந்து நான் பெற்ற முழுமையைப் பெறுவாய்’ என சுப்ரை கெளரனை வாழ்த்தி விண் ஏகியது.’