Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

March 05, 2016

வையத் தலைமை கொள் - பாரதி

Image result for வையத் தலைமை கொள்

ஆத்திச்சூடியில் ஒரு சொல் இருக்கிறது. “வையத் தலைமை கொள்”. பாரதி ஒவ்வொருவரையும் பார்த்துச் சொல்கிறான் வையத் தலைமை கொள். இதில் ஒரு முரண்பாடு உண்டு.

வையகம் ஒன்றுதான். அதற்கு நான் தலைமை ஏற்றுக்கொண்டால் அந்த சொல் உங்களுக்கு இல்லையா? அப்படி சொன்னால் இந்த வையத் தலைமை கொள் என்கிற சொல்லுக்கு என்ன பொருள். சில இலக்கியச் சொற்களுக்கு பொருள் அற்புதமாக இருக்கிறது. ஆனால் பொழிப்புரை தந்தவர்கள் தவறாக தந்து விடுகிறார்கள். ஒரு வார்த்தைக்கான பொருள் எப்போது நமக்கு புரிந்துபோகிறதோ வாழ்க்கைக்கான அர்த்தம் அப்போது புரிந்து போகிறது.

“வையத் தலைமை கொள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். இன்று போலியாக நடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த உலகம் கோடி ரூபாய் கொட்டிக் கொடுக்கிறது. ஆனால் அதுவே ஒரு உண்மையான சிந்தனையாளனுக்குத் தரமாட்டார்கள். அப்படியென்றால் சிந்தனையாளர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக மாற மாட்டார்களா? சுகி சிவம் சொல்வார், “நான் கோடீஸ்வரன்தான், எப்போது தெரியுமா”? நான் சுகி சிவம் பேசுகிறேன் என்று சொன்னால் தமிழகத்தில் ஒரு கோடி காதுகள் எப்போது திறந்துகொள்கின்றனவோ அப்போது நான் கோடீஸ்வரன் ஆகிறேன்.” இப்போது எனக்கு “வையத் தலைமை கொள்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிகின்றது. நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் நீங்கள் அந்தத் துறையில் வல்லமை பெற்றீர்களென்றால் “வையத் தலைமை” கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். எந்தத் துறையை கையில் எடுத்தாலும் அந்தத் துறையில் முழுமையாக ஈடுபாடு கொண்டு அந்த உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்பு. அதுதான் வல்லமை. அது ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது. நான் இன்றைக்கு ஒரு வார்த்தையை விதைக்கிறேன். நண்பர்களே! அந்த வார்த்தையை உங்கள் மன அறையில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு மந்திரமாக சொல்லிக் கொடுங்கள். “வியப்பது வீழ்ச்சி” யாரைப் பார்த்தும் நீங்கள் வியக்காதீர்கள்.


நன்றி: நமது நம்பிக்கை

March 03, 2016

ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.


பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.


சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.


தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற -எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.

- மகாகவி சுப்ரமணிய பாரதி

Image result for ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)

January 18, 2016

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ....

மூலம்: எழுத்தாளர் ஜெயமோகன் (சுட்டியைத் தட்டுக)
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி"

ராமன் ராவணனை வதம் செய்யும் காட்சிச் சித்திரம்


சில நாட்கள் முன்பு இவ்வரிகளை வாசித்து அதன் பொருளை, காவியத்தின் உச்சத்தை (காவிய உச்சமாக அமைவது அதிமானுடங்கள் இரண்டு மோதிக்கொள்ளும் ஒரு புள்ளி) மானுடன் வழியாக கம்பன் நிகழ்த்தி இருக்கும் கம்பராமயண வரி இது. இதற்கு பொருள் ஜெயமோகனின் எழுத்தால் பார்வையால் பார்க்க முடிந்தது. மானசீகமான் நன்றிகள்.

பொருள் இதோ (நன்றி: ஜெயமோகனின் வலையத்தில் இருந்து [சுட்டியை தட்டவும்]):

காவியம் என்பது கடல்போல் விரிந்து செல்லும் பேருள்ளம் கொண்ட கவிஞனால் கடவுளுக்கு நிகரான இடத்தில் நின்று இவ்வாழ்க்கையை நோக்கி எழுதப்படுவது. அவனுக்கு அந்தத் தளத்தில் மானுட உண்மைகளே கண்ணுக்குப்படுகின்றன, எளிய விருப்புவெறுப்புகள் அல்ல.

கம்ப ராமாயணத்தின் நாயகன் ராமன். அறத்தின் மூர்த்தியாக ஒரு மானுடனைப்பற்றிப் பேசுவதே கம்பனின் நோக்கம். ஆனால் காவியகர்த்தனாகிய கம்பன் கவிதையின் ஆயிரம் கால் புரவியில் ஏறிக்கொள்ளும் போது கம்பன் எனும் மானுடனை சிறிதாக்கி மெலெழுகிறான். அது நிகழாவிடில் அந்நூல் காவியமே அல்ல.

ராமனின் அனைத்துச் சிறுமைகளும் கம்பனால் தான் சொல்லப்படுகின்றன. ராவணனின் அனைத்து மாட்சிகளும் கம்பன் சொல்லாலேயே துலங்கி வருகின்றன. புலவர் குழந்தையே கம்பனில் அள்ளியே தன் காவியத்தை ஆக்கியிருக்கிறார். கம்பன் எவரையும் கீழிறக்கவில்லை. அவன் காவிய உச்சமாக அமைவது அதிமானுடங்கள் இரண்டு மோதிக்கொள்ளும் ஒரு புள்ளி.

ராவணன் ராமனின் அம்பு பட்டு விழும் உச்ச கட்டம். கம்பனின் சொற்கள் இப்படி எழுகின்றன. கோல் பட்டுச் சீறி எழும் ராஜநாகத்தைப் போல…

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி

இங்கே அரக்கனைக் கொல்லும் அவதாரம் அல்ல, அறமிலியை அழிக்கும் பேரறத்தான் அல்ல ஒரு கணவனும் இருக்கிறான். தன் மனைவி மேல் காமம் கொண்ட அன்னியனின் உள்ளத்தின் ஆழத்து அடுக்குகளுக்குள் சென்று தேடித் தேடித் துழாவிச் சலிக்கும் ஒரு கணவனின் உள்ளத்தை காணமுடிகிறது இவ்வரியில்.

ஒவ்வொரு சொல்லாலும் அந்த நுட்பத்தை நிகழ்த்துகிறான் தமிழ்த் தெய்வம் சன்னதம் கொண்டெழுந்த நாவினன். சீதை கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஆகச் சொல்லப்படுகிறாள். கற்பின் கனலாக அல்ல, மோகவல்லியாக. பித்தூட்டும் பெண்ணாக.

அசோகவனத்தில் கோடை நதியென மெலிந்து தெளிந்து ஒளி கொண்டு தவக்கோலம் பூண்டிருக்கும் நாயகி அல்ல அவன் நினைக்கும் அப்பெண். கள் மலர் சூடி கண்மலர்ந்து சிரித்து ராமனை களி கொள்ள வைத்த இளங்கன்னி. அவன் அங்கு தேடுவது அவளை.

ராவணன் அந்தக் கன்னியை தன் ஊன்விழிகளால் கண்டிருக்கவே மாட்டான், அவனுள் கரந்த காதலன் காணாமலிருப்பானா என்ன?

ராவணன் சீதையை கவர்ந்து வந்தது தெரிந்த காதலே. அப்படியென்றால் கரந்த காதல் எது? எங்கோ ஆழத்தில் அப்பாலும் ஒரு காதல் இருந்ததா? முற்றிலும் வேறானது? கள்ளிருக்கும் மலரா அவன் உள்ளம்?

ராவணனின் நகர்ச்சிறையிலிருந்து அவளை மீட்கலாம் ராமன், மனச்சிறையிலிருந்து எப்படி மீட்பான்? உள்ளிருக்கும் எனக் கருதி தடவுகிறது அம்பு. பதைப்புடன் ஏமாற்றத்துடன் சீற்றத்துடன்…

இன்னும் சிலநாட்களில் அவளை அனல்தேர்வுக்கு அனுப்பப் போகிறவன் அவன். அதற்கு ஒர் சலவைக்காரரின் சொற்கள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றன , அவ்வளவே. அதற்கான அந்தத் தவிப்பு அவனுள் இப்போதே இருக்கிறது.
இந்த உச்சத்தில் மானுட ராமனின் அம்பு பட்டுச் சரியும் அமரக்காதலனாகிய ராவணனே வாசகனின் கண்முன் பேருருவம் கொள்கிறான். அவனை நோக்கியே காவியகர்த்தனும் கண்ணீர் உகுக்கிறான் எனத் தோன்றுகிறது.

வீழ்ந்தான் அரக்கன் என அலையெழுந்து பூசல் கொண்டாடவில்லை கம்பனின் சொற்கடல். அங்குநிகழும் மானுட நாடகத்தின் உள்ளே புகுந்து தடவிச் செல்கிறது காவியச்சொல் எனும் வாளி. அங்கு கவிஞன் பிரம்மத்தின் சொல்வடிவத் தோற்றமென நின்றிருக்கிறான்.

பின்னும் மனம் விரியும் வாசகன் மட்டுமே பெருங்காதல் கொண்ட கணவனே ஆயினும் , பேரறத்தான் ஆயினும், புவியணைந்த பரம்பொருளே ஆயினும் அவன் மானுடன் என உணர்ந்து , அவன் ஆழம் தன் ஆழமே என உணர்ந்து அவனை மேலும் அறிவான். நீ நான் என இங்கு வந்தவன் அல்லவா என நெகிழ்வான்.


கம்பர்

December 21, 2015

குறுந்தொகை - காமம் காமம்

136. குறிஞ்சி - தலைவன் கூற்று

காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றாள்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.
    -மிளைப்பெருங் கந்தனார்.

Translation 1
Love, love, they say. Love
is neither a demoness
nor a malady.

Neither does it grow on you
infinitesimally
nor does it cool off
with time.

No, the nature of love
is that of the elephant
that placidly chews on foliage
and yet, is driven into musth
when the time comes,
and lightning strikes

at the first sight
of her.
  - By Milai Perung-Kandhan

Translation 2 (by (AK Ramanujam)
Love is not a disease nor it is a feeling which will come and leave you after some time(effectively saying it is not a crush or infatuation). It is a feeling which is always hidden in you and get triggered suddenly. The trigger in case of love is when you see your lady love. All your hidden feeling takes complete control over you. This is is compared with madness(madam) of the elephant which is usually very calm creature. The madam is a very aggressive state similarly the poet is building an imagery that the madness of love is so aggressive(the love desire) that a person cannot take control over it. He doesn't know when it occurs and will never know when it is going to go away.

 
பொருள்: (கற்க நிற்க) 
     (பி-ம்.) 3. ‘தணித்தலும்’; 4. ‘றாள் பதம்’.
     (ப-ரை.) காமம் காமம் என்ப - காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; காமம் - அக்காமமானது, அணங்கும் - புதியதாகத் தோற்றும் வருத்தமும், பிணியும் அன்று - நோயும் அன்று; நுணங்கி - நுண்ணிதாகி, கடுத்தலும் - மிகுதலும், தணிதலும் - குறைதலும், இன்று - இலது; யானை---, குளகு மென்று ஆள் மதம் போல - தழை யுணவை மென்று தின்று அதனாற் கொண்ட மதத்தைப் போல, காணுநர் பெறின் - கண்டு மகிழ்வாரைப் பெற்றால், அது பாணியும் உடைத்து - அக்காமம் வெளிப்படும் செவ்வியையும் உடையது.

     (முடிபு) காமம் காமம் என்ப; காமம் அணங்கும் பிணியும் அன்று; கடுத்தலும் தணிதலும் இன்று; அது காணுநர்ப் பெறின் பாணியும் உடைத்து.

     (கருத்து) காமம் இயல்பாகவே ஒருவரிடம் இருந்து உரிய காலத்தில் வெளிப்படுவது.
     (வி-ரை.) தலைவன் ஒரு தலைவியைக் காமுற்றா னென்பதை யறிந்த பாங்கன், “பேரறிவுடைய நீ காம நோயை அடைதல் நன்றோ?” என்று இடித்துரைக்க, அவனை நோக்கித் தலைவன் கூறியது இது.

     என்ப - என்று உலகினர் கூறுவர். பொதுவாகச் சுட்டினும் பாங்கன் கூறியதையே தலைவன் கருதினான். அணங்கு - பிறரால் உண்டாகும் வருத்தம். பிணி - தன்பால் தோன்றும் நோய். கடுத்தல்: கடியென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது; (குறள். 706, பரிமேல்..)

     நுணங்கிக் கடுத்தலென்னும் தொடரை இரண்டு செயலாக்கி நுணங்குதலும், கடுத்தலுமென்று கொள்க. கடுத்தல் - வெம்மையாதல்; தணிதல்- தண்மையாதல் எனலும் பொருந்தும் (குறள். 1104.)

     அடங்கியிருந்த யானையின் மதம் தழையுணவை உண்ட காலத்தில் வெளிப்படுவதைப் போல, ஊழின் வலியால் காணற்குரியாரைக் காணப்பெறின் இயல்பாகவே உள்ளத்துள் அடங்கியிருந்த காமம் வெளிப்படுமென்று உவமையை விரித்துக் கொள்க. இங்ஙனம் கூறியதனால், “தெய்வத்தின் ஆணை வழியே யான் தலைவியைக் கண்டேன்; அவள் எனக்குரிய ளாதலின் அவளைக் கண்ட மாத்திரத்தே என்பால் இதுகாறும் தோற்றாமல் அடங்கியிருந்த காமம் வெளிப்படும் செவ்வியை உடையதாயிற்று. ஆதலின் யான் கொண்ட காமம் பிறரால் வந்த வருத்தமன்று; என்பால் புதிதாக வந்த நோயுமன்று” என்பதைத் தலைவன் விளக்கினான்.


பொருள் 2 (மூன்றில்)
    “காமங் காமம் என்ப காமம்
    அணங்கும் பிணியும் அன்றே”

என்ற இரு வரிகள் பொதுவாய் கொண்ட கவிதைகள் அவை. இரு கவிதைகளும் காமத்தின் இரு வேறு அம்சங்களைப் பற்றி பேசுகின்றன. மிளைப்பெருந்தனாரையும் கலாப்ரியாவையும் அருகருகில் நிறுத்திப்பார்ப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

அணங்கு என்றால் சோகம் என்று பொருள். என்னை மிகவும் பாதித்த குறுந்தொகை வரி ஒன்று உண்டு. “யார் அணங்குற்றனை கடலே” என்று கடலை நோக்கி கேட்பாள் தலைவி. இதற்கு என்ன பொருள்? யாருக்காக சோகப்பட்டாய் என்பது தானே அந்த வரிக்கான பொருள்? ஆனால் அணங்கு என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் உண்டு என்று பின்னர் அறிந்தேன். சன்னதம் கொண்டு ஆடுதல், பேய்ப்பிடித்து ஆடுதல். இப்பொழுது அந்த “யார் அணங்குற்றனை கடலே” வரியின் பொருள் என்ன? “யாருக்காக வெறிபிடித்து ஆடுகிறாய் கடலே? “ அல்லது “யார் காரணமாக வெறி பிடித்து ஆடுகிறாய் கடலே?”. கடலின் கொந்தளிப்பின் முன் நின்று நான் இந்த வரியை உச்சரித்திருக்கிறேன். இன்று இந்த வரியை கற்பனாவாத வரி என்று ஒரு விமர்சகன் நிராகரிக்கலாம். ஆனால் அந்த வரியுள் புதைந்திருக்கும் எழுச்சி உணரக்கூடிய ஒன்று.

காமம் என்பது அணங்கோ நோயோ அல்ல என்கிறார் மிளைப்பெருங்கந்தனார். இங்கு அணங்கு என்பதற்கு சோகம், துயரம் என்று பொருள் கொள்ளலாம். வெறி வந்தாடுதல் என்ற பொருள் கொண்டால் அந்த கணம் மட்டுமே தோன்றும் உணர்வெழுச்சி என்ற பொருளும் வருகிறது அல்லவா? சரி, துயரமோ, உணர்வெழுச்சியோ, நோயோ அல்ல காமம். பின் என்ன தான் அது? விளங்கங்களுக்குள் போவதற்கு முன்... இங்கு காமம் என்பதை உடல்சார்ந்த காமம் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் உளம் சார்ந்த காதலையும் குறிப்பதாக கொண்டால் பாடலின் வீர்யம் அதிகரிப்பதாகத் தோன்றுகிறது.

முதல் விளக்கத்தை பார்க்கலாம்.
   
    காமம் காமம் என்ப காமம்
    அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
    கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
    குளகு மென்றாள் மதம் போலப்
    பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.
   
    - மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 136)
காமம் காமம் என்கிறாயே, காமம் என்பது அணங்கோ பிணியோ அல்ல. அது குறைவதும் இல்லை, தணிவதும் இல்லை. அதிமதுர தழைகளை உண்ட யானையின் உணர்வெழுச்சி போன்றது அது. யானை ஒரு முறை மிக இனிப்பான அந்த தழைகளை உண்டதும் அது உணர்வெழுச்சு கொள்கிறது. அந்த உணர்வெழுச்சி எங்கே போகிறது? எங்கும் இல்லை. தணியாது குறையாது அதனுள் உறைகிறது அந்த உணர்வெழுச்சி. அதே தழைகளை மீண்டும் பார்த்த கணம் அது குடம் உடைந்து நீர் வெளியேறுவது போல வெளியேறுகிறது. அது போன்றது தான் காதலும் என்கிறார். காதல் ஒரு முறை வரும் உணர்வெழுச்சி அல்ல. காதல் கொண்டவரை காணும் போதெல்லாம் பொங்கும் உணர்வு. இதுவே முதல் விளக்கம்.
அடுத்த விளக்கம்,
   
    காமம் காமம் என்ப காமம்
    அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
    முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
    மூதாதை வந்தாங்கு
    விருந்தே காமம் பெருந்தோ ளோயே.
   
    - மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 204)
காமம் காமம் என்கிறாயே, காமம் என்பது அணங்கோ பிணியோ அல்ல. மேட்டு நிலத்தில் விளைந்த முற்றாத இளம்புல்லை முதிய பசு ஒரே சமயத்தில் உண்டு முடிக்காமல் அசை போட்டுக்கொண்டே இருக்குமே அது போல நினைக்க நினைக்க இன்பம் தருவது அது. இலை, புல் ஆகியவை ஜீரணிக்க மிகவும் கடினமான பொருட்கள். ஒவ்வொரு மிருகமும் இதை ஒவ்வொரு விதத்தில் எதிர்கொள்கிறது. ஆடு மாடு போன்ற கால்நடைகள் உண்ட இலைகளை மீண்டும் வாய்பகுதிக்கு கொண்டு வந்து அசை போடுகின்றன. வயதான பசுவின் ஜீரணசக்தி இன்னமும் மழுங்கியே இருக்கும். அசை போடுதலின் நீளம் அதிகமாகவே இருக்கும். அசை போடப் போட இலையிலிருந்து புதுப்புது சுவைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த இலைகளுடன் ஏன் காதலை ஒப்புமைப்படுத்த வேண்டும்? காதலும் அது நிகழும் பொழுது முழுதும் புரிவதில்லையா? அதை அசை போடப் போடத்தான் பிடிபடுகிறதா? காதல் என்ன என்பதும் ஒவ்வொரு முறை “அசை” போடும் போதும் புதிதாக உருவாகி வருகிறதா?
இன்னொன்றும் உள்ளது. இந்த இரண்டாம் விளக்கம் முதல் விளக்கத்தின் ஒரு வெற்றிடத்தை நிரப்புகிறது. முதல் விளக்கத்தில் காதல் காதலிப்பவரை காணும் தோறும் வரும் உணர்ச்சி என்கிறது. எனில் காணாத போது? காணாத போதும் அசை போடுதலை போன்று இன்பம் பயப்பது அது.

குறிப்பு : எனது பழைய கட்டுரை ஒன்றின் நீட்சி இது.



(பொருள்: காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; அக் காமம் புதியதாகத் தோன்றும் வருத்தமும் அன்று; உடலில் தோன்றும் நோயும் அன்று. கடுத்தலும்(மிகுதலும்), தணிதலும் இன்று; யானை குளகு என்ற தழையுணவை மென்று தின்று அதனால் கொண்ட மதத்தைப் போல கண்டு மகிழ்வாரைப் பெற்றால் அக்காமம் வெளிப்படும் சிறப்பினை உடையது).

அடங்கியிருந்த யானையின் மதம் குளகு என்ற தழையுணவை உண்டதும் வெளிப்படுவதுபோல ஊழின் வலிமையல் காணற்குரியவரைக் காணப்பெறின்இயல்பாக உள்ளத்தில் அடங்கியிருந்த காமம் வெளிப்படும் என்று உவமையை விரித்தால் பொருள் புலப்படும்.

சிந்தாமணியிலும் நச்சர் உரையில் " குளகுபோல் மதத்தை விளைவிப்பவள் இவளும் ஆதலால் விடுத்தலரிதென்றான்"(சிந்தமணி உரை 750) என்று குளகு பற்றிக் குறித்துள்ளார்.

மேலும் மதம் கொண்ட யானையின் மத்தகம் வாழையின் குருத்தைத் தடவும்பொழுது மதம் அடங்கும்(வலிமை அழியும்) என்று ஒரு குறிப்பு வருகின்றது.

" சோலை வாழைச் சுரிநுகும் பினையஅணங்குடை யருந்தலை நீவலின் மதனழிந்துமயங்கு துயருற்ற மையல் வேழம்"( குறுந்தொகை 308)

யானைக்கும் வாழைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி (அகம் 302-1-4),அகம் 8- 9-11) என்னும் சங்க நூல் வரிகளாலும் இதனை உறுதிசெய்துகொள்ளலாம்.

எனவே யானைக்குக் குளகு உண்டால் மதம் பிடிக்கும் என்றும் வாழை இலையின் குருத்து மதத்தை நீக்கும் என்று குறுந்தொகை வழியாக அறியமுடிகின்றது.

வாழையினால் யானையின் வலி கெடும் என்றது " யானைக்கு வாழைத்தண்டு,ஆளுக்குக் கீரைத்தண்டு" என்று சிற்றூரில வழங்கும் பழமொழியாலும் உணரலாம் என்று உ.வே.சா பழமொழியை எடுத்துக்காட்டுகின்றார்.

இது பற்றி பிரஞ்சு நாட்டுப் பேராசிரியர் செவியார் அவர்களிடம் உரையாடியபொழுது அவர் புதுமைச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.அவர் தொல்காப்பியம் சேனாவரையர் உரையை எழுத்தெண்ணிக் கற்றுப் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்த்தவர்.

சேனாவரையர் உரையில் இடம்பெறும் (தொல்.சொல். நூற்பா 37 உரை) "யானைநூல் வல்லானொருவன்" என்னும் தொடரை எடுத்துக்காட்டி யானை இலக்கணம் குறிப்பிடும் நூல் தமிழில் இருந்ததையும் "கஜ சாஸ்திரம்" என்னும் நூல் சரசுவதிமகால் நூலகத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டு யானை நூல் படித்தால் நான் தேடுவதற்கு விடை கிடைக்கலாம் என்று ஒரு குறிப்பை விளக்கினார்.


December 11, 2015

நின்னயே ரதி என்று

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாள்!
பல வருடங்களாக எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் ஒன்று.

நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
I think you are the most beautiful women, Oh Lover (Kannammaa)!
தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)
I thought you as my friend and surrendered to you Oh Lover(Kannammaa)!

பொன்னயே நிகர்த்த மேனி, நின்னையே நிகர்த்த சாயல்!..
Gold might equal your skin! Nothing to equal you(or only your resemblance can equal you)!
பின்னையே,, நித்ய கன்னியே! கண்ணம்மா!..... (நின்னையே!)
And then you are the young angel! Oh Lover(Kannammaa)

மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ!
The king is showering me with arrows... at that time
கண் பாராயோ! வந்து சேராயோ!... கண்ணம்மா! ...... (நின்னையே!)
Look at me! Reach out to me (to save me)! Oh Lover(Kannammaa)

யாவுமே சுகமினிகோர் ஈசனாம் எனக்கும் தோற்றம்!
Everything is bliss now onwards when united with the God(Lover) is what it appears to me!
மேவுமே!, இங்கு யாவுமே கண்ணம்மா..... (நின்னையே!)
​Love! Love Everything here! Oh Lover (Kannammaa)!

December 07, 2015

தாமதம்

வாழ்வில் முடிவுகளை தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கொடியது என்பதை முடிவு எடுத்தப்பின்பு அறிந்துக்கொள்கிறேன். சில சமயம் தாமதத்தின் தாக்கம் தற்செயலில் நம் ஆற்றாமையால் விளங்குகிறது. சில சமயம் முடிவின் முடிவு நல்லவையாக இருக்கும். ஆனால் முடிவிற்கு முன் நாம் தயங்கிய ஒவ்வொரு நாளும் நரகம். இரு விதத்திலும் தாமதம் கொடியதே. இரவு துயிலும் பொழுது உரக்கம் இல்லையென்றால், சிந்தனைகள் தற்செயலில் முழுமனதுடன் குவிக்க முடியவில்லையென்றால் அது துன்பத்திற்கு அறிகுறி. சில முடிவுகளுக்கு மிகபெரிய பரிசுகளை கொடுத்துள்ளேன்.

October 09, 2015

உன் மீது வைத்திருப்பேன்

முன்பு சில பெண்கள் மீது
ஏன் அன்பை வைத்தேனொ
தெரியவில்லை
எல்லா அன்பையும்
உன் மீது வைத்திருப்பேன்
இனி ஒவ்வொருநாளும்
இன்னும் அதீதமாய்
காதல் கொள்வேன் ஹம்சினி

உன்னை காதலிக்கிறேன்
என்று நீ
ஒவ்வொரு முறை
உச்சரிக்கும் போதும்
என் மனம்
கள்வெறிக்கொள்ளுதடி
செல்லமே
உன் அதரத்தில்
பரிசிக்கை செய்வேன்

August 07, 2015

கவிப்ரசங்கி!

உன்னுடன் பழகிய பின்பு
உனக்காக கவியெழுத அமர்ந்தேன்
கவிக்கு கவியெழுதும்
கவிப்ரசங்கியோ நான்
என்று நினைத்தேன்!

July 30, 2015

உருவாய் அருவாய் | முருகர் பாடல்

சில வாரங்களாக முன்பு  முருகபெருமானுக்கு பாடும் இப்பாடலை பற்றி அறிந்தேன். தமிழ்ப்பாடல் ஆயினும் எனக்கு இதன் அக அர்த்தம் விளங்கவில்லை. சற்று நேரடியாக இல்லை. ஜெயமோகனின் வளையத்தில் தற்செயலாக படிக்க நேரிட்டது. எப்படிப்பட்ட வரிகள் இவை என்பதை நீங்களே படித்து தெரிந்துக்  கொள்ளுங்கள்!

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வளையத்தில் இருந்து பொருள் இங்கே 

அதிலும் அருணகிரிநாதர் நுட்பமான சம்ஸ்கிருத தத்துவக் கலைச்சொற்களை தாராளமாகவே பெய்து தன் பாடல்களைப் பாடியிருக்கிறார். இருபெருமொழிகளிலும் ஆழ்ந்த ஞானம் உடைய ஒருவரால் மட்டுமே அந்நூலின் அகம் காணமுடியும், அனுபூதியும் கனியுமென்றால். கந்தரனுபூதியும் அப்படிப்பட்ட நூலே.

நீங்கள் சொன்ன கவிதை இது. பெரும்பாலான சைவர்களுக்குத் தெரிந்த பாடல் இதுவாகவே இருக்கும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


மிக எளிமையாக ‘முருகனே நீ வந்து எனக்கு அருள்வாய்’ என்று கூவும் வரிகள் இவை என நம்மில் பலர் சொல்லலாம். ஆனால் இவ்வரிகள் வழியாகச் செல்லும் ஒரு கூர்ந்த மனம் அடையும் பொருள்நிலைகள் முடிவிலாதவை.

முருகனை பரம்பொருளாகக் கண்டுவணங்குகிறது இக்கவிதை. பொதுவாக நம் மரபில் உருவம் கொண்ட எந்த ஒரு தெய்வத்தையும் தோத்திரங்களில் உருவங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட பிரம்ம வடிவமாக, நினைப்புக்கு எட்டாத எல்லையற்ற பரம்பொருளாக உருவகித்துப் பாடுவதே வழக்கம்.

அந்தப் பரம்பொருளின் சித்திரத்தை இக்கவிதை அளிக்கும் விதமே கூர்ந்து கவனிக்கவேண்டியது. ‘உருவமாகவும் அருவமாகவும், மொட்டாகவும் மலராகவும், மணியாகவும் அதன் ஒளியாகவும், கருவாகவும் அதன் உயிராகவும், செயலாகவும் அதன் விதியாகவும் இருப்பவனே நீ குருவாக வந்து அருள்வாய்’ என்று இறைஞ்சுகிறது.

இந்தவரிகளில் அருவமான பரம்பொருள் உருவவடிவம் கொண்டு வருவதன் ஒரு நுண் சித்திரத்தை அருணகிரிநாதர் அளிக்கிறார். இப்பிரபஞ்சவெளியின் சாரமாக உள்ள அலகிலா ஆற்றல், அல்லது இப்பிரபஞ்சத்தின் அடிப்படையாக உள்ள பெருங்கருத்து, அல்லது இப்பிரபஞ்சமேயாக மாறித்தெரியும் அது எவ்வாறு நாமறியும் நூறாயிரம் பொருட்களாக, அவற்றில் நாம் கண்டு வணங்கும் தெய்வங்களாக, உருமாற்றம் கொண்டது? இன்றைய இயற்பியலாளனின் பெருவினாவும் அதுவே என நாம் அறிவோம்.

‘உருவாய் அருவாய்’ என்ற எதிரீடு முதலில் முன்வைக்கப்படுகிறது. நாம் காணும் அனைத்துமே உருவமாக உள்ளன. அவ்வுருவங்கள் அனைத்துமாக தன் இறைவனை உருவகிக்கும் இக்கவிதை பொருள்வயப்பிரபஞ்சமாகவே அவனை முன்னிறுத்துகிறது. அந்தப்பொருள்வயப்பிரபஞ்சம் அல்லாத அருவமான வெளியாகவும் அவனை உருவகிக்கிறது.

உருவம் கொண்ட இறைவடிவமாகவும் உருவமில்லாத இறைவடிவமாகவும் இருப்பவன் எனச் சொல்லிவிட்டு அதன்பின் அதற்கு இணையாக பிற எதிரீடுகளை வைத்துச் செல்கிறது கவிதை. ‘உள்ளதாகவும் இல்லாததாகவும்’ என்பது அடுத்த எதிரீடு. உள்ளது உருவம். இல்லாதது அருவம். உள்ளவை எல்லாம் அவனே. இல்லை என்ற நிலையிலும் அவனே இருக்கிறான். பெருவெளியில் இன்மையும் கூட  ஓர் ஆற்றலாக, பரம்பொருளின் இருப்பாக ஆகலாம். அது இல்லாமல் இருக்கும்நிலைகூட அதுவே!

அடுத்த எதிரீடு எளிய உவமை. ‘மொட்டாகவும் மலராகவும்’ என்ற வரி இந்திய வேதாந்த மரபை உணர்ந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை அளிக்கும். ‘பரம்பொருள் அருவ நிலையில் இருந்து உருவமாகி வருகிறது’ என்பதே வேதாந்த தரிசனம். அருவநிலையே உண்மையானது, உருவநிலை அந்த அருவநிலை உருவாக்கும் ஒரு மாயத்தோற்றமே என அத்வைதம் வாதிடும்.

ஆனால் இந்த வரி உருவப்பிரபஞ்சத்தை முதல்நிலை உண்மையாக முன்வைத்து அதன் நுண்வடிவமாக அருவநிலையை உருவகித்துக்காட்டுகிறது.  உருவத்துக்கு மொட்டும் அருவத்துக்கு மலரும் உவமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. உருவம் கொண்டு நம் முன் நிற்கும் இந்த பெருவெளி என்ற மொட்டு மலர்ந்த நிலையே உருவமிலா பரம்பொருள் என்று சொல்லப்பட்டிருக்கிறது!

அடுத்த எதிரீடு இன்னொரு உவமைமூலம் அதையே மேலும் வலியுறுத்துகிறது. ‘மணியாகவும்  ஒளியாகவும்’. இந்த பருப்பிரபஞ்சம் மாணிக்கம் என்றால் அதன் ஒளிதான் அலகிலாத ஆற்றலாக விரிந்த பரவெளி. அருவம் என்பது உருவமாகி நிற்பவற்றின் சாரமாக உறையும் ஒளியே என்கிறது இந்த உவமை!

மேலும் வலியுறுத்துகிறது அடுத்த எதிரீடு. ‘கருவாகவும் உயிராகவும்’ கரு என்று இந்த பொருள்வயப்பிரபஞ்சமே சொல்லப்படுகிறது. அந்தக் கருவுக்குள் உள்ள உயிரே ஆற்றல்பிரபஞ்சம் அல்லது அருவ வெளி!

கடைசி எதிரீடு பௌத்த தரிசனத்துடன் தொடர்புடையது. பௌத்தம் இப் பொருள்வயப்பிரபஞ்சம் என்பது ஒரு முடிவிலா நிகழ்வே என்று வகுக்கிறது. இந்நிகழ்வின் இயங்குவிதியாக உள்ளதே பேரறம் அல்லது மகாதர்மம்.  ‘கதியாகவும் விதியாகவும்’ என்ற வரி அதையே சுட்டுகிறது. கதி என்றால் நிகழ்வு. அந்நிகழ்வாகவும் அதன் விதியாகவும் முருகனை உருவகிக்கிறது இவ்வரி.

எதிரீடுகளின் வரிசையை வைத்துப் பார்த்தால் உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட பொருள்பிரபஞ்சத்தையே கதி என்று சொல்கிறார் அருணகிரிநாதர். இப்பருப்பிரபஞ்சம் ஒரு கதி [இயக்கமுறை] மட்டுமென்றால் அதன் சாரம் அதன் விதி. அந்த விதியே அருவம், இன்மைநிலை, மலர் , ஒளி, உயிர்… இரண்டும் அவனே என்று சொல்கிறது.

கடைசி வரி மிக இனிய ஒரு முடிச்சுடன் முடிகிறது. ‘குருவாய் வருக’ என்று முருகனை அழைக்கிறது அது. குரு என்பது இங்கே உருவமாக, உள்ளதாக, மொட்டாக, மாணிக்கமாக, கருவாக சொல்லப்பட்ட முதல்நிலையின் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் அருவம், இன்மை, மலர் , ஒளி, உயிர் எனச் சொல்லப்பட்ட இரண்டம்நிலையில் இருப்பது எது?

மொட்டு மலராவதுபோல, மணியில் ஒளி பிறப்பதுபோல, கருவில் உயிர் நிகழ்வது போல குருவின் விளைவாக உள்ளது ஞானமே. அனுபூதியே உயர் ஞானம். குருவாக முருகன் வந்தால் ஞானமுமாக அவனே நிற்பான் என உரைக்கிறது பாடல். குருவாய் வருக என்ற அழைப்பு அவ்வகையில் மேலும் முன்னகர்ந்து ஞானமுமாக வருக என முடிகிறது.

இவ்வரிகள் கந்தரனுபூதியின் கடைசிப் பாடல். இவ்வரிகளில் இருந்து பின்னால்நகர்ந்து முன்னாலுள்ள வரிகளை எட்டினால் பல வரிகளின் ஆழமும் தீவிரமும் நம்மை திகைக்கச் செய்யும்.

‘தன்னந் தனி நிற்பது தானறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ’

என்ற வரி ஓர் உதாரணம். வேதங்கள் முடிவிலா பரவெளியின் ஈடிணையற்ற தனிமையை பாடுகின்றன. அது அல்லாமல் வேறொன்றுமில்லை என்ற நிலையின் தனிமை. பரம்பொருளின் தனிமை. அந்த எல்லையற்ற தன்னந்தனிப்பொருள் தன்னை இன்னொருவருக்கு எப்படி அறிவுறுத்த இயலும்?

அவ்வினாவுக்கு விடையாகவே குருவாக வருக என்ற அழைப்பு. குருவாகி அது வருகையில் ஞானத்தின் அனுபூதி அதன் விளைவாக நிகழ்ந்தாகவேண்டும் அல்லவா?

கந்தரனுபூதி சைவசித்தாந்தத்தில் கிளைத்த நூல். ஆகவேதான் அது வேதாந்த மரபைப்போல உருவத்தை நிராகரிக்கவில்லை. பருப்பிரபஞ்சமும் அதற்கு ஓர் உண்மையே. அது மாயத்தோற்றம் அல்ல. மாயை என்பது அதை முழுதுணராது மயங்கும் நமது குறைநிலையே. பருப்பிரபஞ்சத்தை அல்லது உருவத்தை முதல் நிலையாக்கி அதில் இருந்து அதன் நுண்நிலையாக பரவெளியை அல்லது அருவத்தைக் கண்டு முன்வைக்கிறது இப்பாடல்.

ஆனால் இந்தியமெய்ஞான மரபுகள் அனைத்துமே உச்சநிலையில் ‘ஆற்றல் X ஜடம்’ அல்லது ‘உருவம் X அருவம்’ என்னும் எதிரீடுகளை தாண்டிய ஒருமையையே முன்னைக்கின்றன. அதையே பாம்பொருள்த்தன்மையாக காட்டுகின்றன. மேலும் பின்னால் சென்றால் இன்னொரு வரியில் அதைக் காணலாம்

அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அற நின்ற பிரான் அல்லையோ?

‘அறிவு என்ற ஒன்று அழியும் நிலையில் நின்று அறிபவர்களின் அறிவில் பிறிது என்ற ஒன்றே அழியும்படியாக நின்ற பிரான் அல்லவா நீ?’ அறிவின் உச்சம் என்பது அறிகிறேன் என்னும் நிலை இல்லாமலாதல். அறிவுடன் அறிபவனும் ஒன்றாதல். அந்நிலையில் நின்று அறிபவர் நெஞ்சில் அவர்களில் இருந்து பிறிதாக அல்லாமல் நிற்கும் அதுவே அவன் என்கிறார் அருணகிரிநாதர். அனுபூதி என்பது அந்நிலையே.

July 27, 2015

செவியோடு பேசியவள்

செவியோடு பேசியவள்
கவியேழுத வைத்தாள்
போகட்டுமா'னு கேட்டவள்
எதற்காக காத்திருந்தாள் ?
திங்கள்விதி சமைத்தவளின்
நினைவுகள் எனக்கு
திஞ்சுவை மீட்சியரிதாதல்

July 25, 2015

சின்சின்னாடி | Cincinnati

நேற்று 24-ஜூலை 2015 அன்று எனக்கு பிடித்த பாடகி ஷ்ரேயா கோஷல் அவர்களின் கச்சேரியினை காணச்சென்றேன். அது மட்டும் இன்றி நண்பன் ஜூட் சத்யனும் வந்தான். நான் ஃபஸ்புகில் ஒருவரிடம் டிக்கேட்டை வாங்கினேன்.  நாங்கள் சரியாக ஒரு வருடம் பின்பு பார்த்துக்கொண்டோம்.  

ஷ்ரேயா கோஷலின் பாடல்கள் அவ்வளவு இனிமை. அவர்களின் குரலும் தேன் சொட்டும் மதுரம். ஒலி பொறியாளர் குரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையை குறைத்துவிட்டார். நல்லாதாய் போயிற்று. ஆனால் ஷ்ரேயா கோஷலின் குரல் அவ்வரங்கத்தையே நிறைத்தது. சிலசமயம் இசை இல்லாமல் பாடல் மட்டும் பாடினார்கள். அவை அனைத்தும் அப்படி ஒரு மதுரம். அவர்களின் குரலில் லயித்து போனேன்.  அவர்கள் குரல் இந்நூற்றாண்டு முழுதும் ஒலிக்கட்டும். அதற்கான அனைத்து ஆரோக்கியத்தையும் இறைவன் அவர்களுக்கு அருள் வேண்டும். 

  

ஷ்ரேயா கோஷல் அவர்கள் பாடிய பாடல்கள் இதோ

1) Bahara - I hate luv story
2) Agar Tum Mil Jao - Zeher
3) Oh Saathi Re - Omkara
4) Saans - Jab Tak Hai Jaan
5) Manwa Laage  - Happy New Year
6) Samjhawan - Humpty Sharma ki Dulhania
7) Journey - Piku
8) Piya O Re Piya - Tere Naal Love Ho Gaya
9) Dheere Dheere (Saibo) - Shor in the City
10) Munbe Vaa - Silunnu Oru Kaadhal
11) Aashiyan - Barfi
12) Barso re - Guru
13) Yeh Ishq Hai - Jab we met
14) Zoobi Doobi - 3 Idiots
15) Ooh La La - Dirty Picture
16) Radha - Student of the year
17) Chinki Chameli - Agneepath
18) Teri Meri - Bodyguard
19) Tujh Mein Rab - Rab Ne Bana Di Jodi
20) Teri Ore - Singh is King
21) Vintunnaavvaa - Ye Maaya Chesaave [Mannippaaya - Vinnaithaadi varuvaayaa]
22) Lag Ja Gale
23) Jaadu Hai Nasha Hai - Jism
24) Raabta - Agent Vinod
25) Bairi Piya - Dev Das
26) Mere Dholna - Bhool Bhulaiyaa
27) Nagada Sang Dhol - Ram Leela
28) Sun Raha - Aashiqui 2





 (Shreya Ghoshal on the stage)

Jude (Right) and I (Left)

ஹம்சாவிற்கு பிடித்த ஷ்ரேயா கோஷலின் பாடல்கள் இதோ
1) Bahara - I hate love stories
2) Sathiya Sathiya - Singam
3) Samjhawan - Humpty Sharma Ki Dulhaniya
4) Tujh me rab dikta hai - Rab ne bana di jodi
5) Jhalla Wallah - Ishqzade
6) Mein Agar Kahoon - Om Shanthi Om
7) Piyu Bole - Parineeta
8) Khabar Nahi - Dostana

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அவர்கள் பாடிய 30 பாடல்களில் (28 ஹிந்தி) 18 பாடல்கள் குறைந்த பட்ச பரிட்சயம் உண்டு எனக்கு. மனதுக்கு நிறைவான நாளாக அமைந்தது. கச்சேரி முடிந்த உடன் ஸ்டேஜ் டோர்க்கு சென்று ஷ்ரேயா கோஷலுடன் ஒரு புகைப்படம் எடுக்க 45 நிமிடம் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் எப்போழுதோ கச்சேரி முடிந்த உடன் அவழியாக கிளம்பிவிட்டார்கள் என்று தாமதமாகவே தெரிந்தது. சற்று வருத்தமே. பின்பு மோட்டலுக்கு வந்து உறங்கினோம். 






சனிக்கிழமை காலை எழுந்து சிறிது நேரம் தோழி ப்ரசன்ன தேவியுடன் கூகுல் ஹங்கொட்-இல் ஜூடும் நானும் உரையாடிக்கொண்டு இருந்தோம். பி.டி வேறு ராஜேஷ் நீ ரொம்ப அழகா தெரியர. இந்த மாதிரிலான் நான் உன்கிட்ட சொன்னதே கிடையாது தோன்னதும் கிடையாது. உன்கிட்ட ஒரு பெரிய மாற்றம் இருக்குனு. பிறகு என்னை பற்றியும் ஜூடை பற்றியும் எங்களது வாழ்வில் நடக்க இருக்க போகும் மாற்றங்களை பற்றியும் நகைத்து உரக்க வெடித்து சிரித்து உரையாடிக்கொண்டு இருந்தோம். ஒரு 30 நிமிடம் மிக நன்றாய் சென்று கொண்டு இருந்தது பேச்சு. குறைந்தது இன்னும் ஒரு 30 நிமிடம் சென்று இருக்க கூடியது. ஆனால்  நாங்கள் மோட்டலை 11 மணிக்கு காலி செய்ய வேண்டிய கட்டாயம்.  பின்பு ஒரு இடத்தில் மதிய உணவு உண்டோம். அதன் பின் ஒரு ஹிந்து கோயிலுக்கு சென்றோம். கோயில் உள்ளே மிக அழகாய் இருந்தது. நிறைவாகவும் இருந்தது. பின்பும் நானும் ஜூட்டும் எனக்கு வேண்டியவரிடம் பேசிக்கொண்டு இருந்தோம். துவக்கத்திலையே அனிமேஷன் அக்‌ஷன் (x-men, wolverine, superman, batman) அது இதுனு பேசி பனியை உடைத்து(ice break) நன்கு பேசினோம்.  சுமார் 90 நிமிடம் பேசினோம். அவர்கள் இருவருமே மிக நன்றாய் பேசினார்கள். புதியவர்கள் பேசிக்கொள்ளுவது போல இல்லை. 

அதன் பின்பு Ant Man(எறும்பு மனிதன்) திரைப்படம் பார்த்தோம் நானும் ஜூடும். வழக்கமான உலகத்தை காப்பாற்றும் ஒரு கதைக்களம். நல்ல படம்.  ஓ ஓ என்று எல்லாம் சொல்லக்கூடாது. ஆனால் Evangeline Lilly சூப்பரோ சூப்பர். அதுவும் அவளின் சிகை அலங்காரம் அவ்வளவு நேர்த்தி!

ஆக இன்று (24,25 July 2015) மிக நன்றாய் சென்றது!! 

 

 Evangeline Lilly

 

July 21, 2015

மௌனம்

பார்க்காத விழிகள்
இதயம்போல் துடித்தது
வாட்ஸ்ஆப்-குறைத்த  விரல்கள்
விச்சித்திரமாய் சொடுக்கியது
பேசாத மௌனம்
பெருக்கியது நேசத்தை


(கண் 8-10 முறைதான் துடிக்கும். இதயம் 72 முறை துடிக்கும்)
(சொடுகர்தே மறந்து போச்சாம்)
19-ஜூலை 

July 16, 2015

ஞாயிறு உன் நெற்றியில்

பதுமையை பார்த்து
ஞாயிறு நெற்றியில்
குடிக் கொண்டதோ
பொற்கதிர்கள்
சுற்றி வீசுகிறதே
அதை காண்கையில்
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே!
 

July 15, 2015

மெல்லிசை

உன்னோடு பேசுவதால்
மெல்லிசை பாடல்கள்
தேவையில்லை எனக்கு
அதனால் கேட்பதில்லை
இருவாரம் பின்பு
உணர்ந்தேன் நான்